பார்வை கண்களில் இல்லை; நம்பிக்கை இருந்தது. மனதில்.."இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவர் ஆவது லட்சியம்" என்று அப்துல்கலாமிடமே கூறிய ஶ்ரீகாந்த் உயர்ந்த கதை!
'இந்த உலகில் உன்னால் எதுவுமே முடியாது’ என்று பலர் சொன்னபோது ‘என்னால் எதுவும் முடியும்’ என்றார் பார்வையற்ற இளைஞர் ஸ்ரீகாந்த்.
2006-ஆம் ஆண்டு டாக்டர் அப்துல்கலாம் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஆந்திராவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம்
வழங்கச்சென்றிருந்தார். அப்போது மாணவர்கள் சிலரை சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது அவருக்கு.
மாணவர்களிடம் கலாம் கேட்டார்: ‘‘நீங்கள் எல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்?’’ ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொல்ல, பார்வையற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் எழுந்து பட்டென்று சொன்னார்...
‘‘உங்களைப்போல் நாட்டின் குடியரசுத் தலைவராக விரும்புகிறேன்.
என் விருப்பம் நிறைவேறினால் நான் தான் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்யப்படுவேன்’’
சுற்றியிருந்தவர்கள் திடுக்கிட, கலாம் புன்னகைத்தார். அந்த மாணவனின் வித்தியாசமான விருப்பத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொண்டார்.
‘‘ஸ்ரீகாந்தைப் போல மிகப்பெரிய இலக்குகளை அடைய ஆசைப்படுங்கள், சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுவதுதான் குற்றம்’’ என்றார்.
‘‘உங்களுடைய கனவு ஒருநாள் நனவாக ஆசைப்படுகிறேன். இதற்காக நீங்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்று ஸ்ரீகாந்திடம் கேட்டுக்கொண்டார்.
பிறவியிலேயே பார்வையற்றுப் பிறந்த ஸ்ரீகாந்த் ஆந்திர மசூலிப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு ஏழை விவசாயக் கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர். அந்தக் காலகட்டத்தில் அந்தக் கிராமமே அவரது குடும்பத்தினருக்குக் கூறிய யோசனை என்ன தெரியுமா? "இந்தக் குழந்தையைக் கொன்றுவிடுங்கள்.."
கண்கள் இல்லாமல் இக்குழந்தை பயனற்றது என்றும் கூறினார்கள். பார்வையில்லாதவராகப் பிறந்ததைவிட வறுமையான சூழ்நிலையில் பிறந்தது தான் ஸ்ரீகாந்திற்கு பெரும் சவாலாக இருந்தது. பார்வையற்ற மகனைப் பள்ளிக்கு அனுப்பினால் எப்படி படிக்க முடியும் என்று எண்ணிய அப்பா தன்னுடன் விவசாயத்திற்குக் கூட்டிச் சென்றார்.
ஆனால், ஸ்ரீகாந்திற்குப் படிப்பதில்தான் பிரியம். வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்குச் செருப்புக் கூட அணியாத கால்களுடன் நண்பர்கள் உதவியுடன் நடந்தே போய் படித்து வந்தார்.
பள்ளியில் இவரைக் கடைசி பெஞ்சில் உட்கார வைத்தும், அவமதித்தும், சந்தேகம் கேட்டால் கேலி செய்தும் அவமானப்படுத்தினார்கள். 'உன்னால் என்ன செய்ய முடியும்?'என்ற கேள்வி கேட்டவர்களிடம், 'என்னால் என்ன செய்ய முடியாது?' என்பதைப் பதிலாக தந்துவிட்டு பள்ளியை விட்டு நின்றார்.
பிறகு பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து படித்தார். பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும்போதுதான் டாக்டர் அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு ஸ்ரீகாந்த்துக்குக் கிடைத்தது.
மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற கலாமின் அறிவுரை ஸ்ரீகாந்த்துக்கு ஒவ்வொரு நொடியும் நினைவில் இருந்து கொண்டே இருந்தது. பார்வை இல்லாத ஸ்ரீகாந்த்துக்கு சுவாமி விவேகானந்தரும் அப்துல் கலாமும் இரண்டு கண்கள்.
பார்வையற்றவர்களுக்கு எதெல்லாம் சவாலோ, அந்தச் சவால்களைத் தனது செவிகளைக் கொண்டு வென்றார். கிரிக்கெட் விளையாடினார், செஸ் விளையாடினார். தேசிய செஸ் வீரராகத் தன்னை உயர்த்திக்கொண்டார். மாநில அளவிலான பார்வையற்றோர் பிரிவு கிரிக்கெட் வீரராகவும் களமிறங்கினார்.
அதுமட்டுமல்ல, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றார். உயர்கல்வியில் இவருக்கு ராயல் சீனியர் கல்லூரியில் இவர் கேட்ட அறிவியல் பிரிவு தரப்படாது, கலைப்பிரிவு தான் ஒதுக்கப்பட்டது. பார்வையற்றவரால் அறிவியல் பிரிவு படிக்க முடியாது என்று காரணம் சொன்னார்கள்.
‘‘அது முடியுமா? முடியாதா? என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன். நீங்கள் எனக்கு அறிவியல் பிரிவுதான் கொடுக்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் சென்றார். வெற்றி பெற்று, அறிவியல் பிரிவைப் படித்தார்.
முழுப் பாடங்களையும் ஆடியோ டேப்பில் பதிவு செய்து, தொடர்ச்சியாகக் கேட்டுக் கேட்டே உள்வாங்கி மனதில் இருத்திக் கொண்டார். முடிவில் 90% மதிப்பெண் எடுத்து கல்லூரி நிர்வாகமே பாராட்டும் சாதனை மாணவரானார்.
அடுத்து இந்தியாவிலுள்ள ஐ.ஐ.டியில் படிக்க விண்ணப்பித்தார். இவரது பார்வைக் குறைபாட்டைக் காரணமாகச் சொல்லி ஐ.ஐ.டி இவரை நிராகரித்தது.
மனம் தளரவில்லை..அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி கல்வி நிறுவனத்திற்குப் பொறியியல் படிக்க விண்ணப்பித்தார்.
ஸ்ரீகாந்தின் விண்ணப்பத்தைக் கண்ட அமெரிக்க எம்.ஐ.டி நிர்வாகம் அவரை வாரி அணைத்துக்கொண்டது. உங்களுக்குக் கட்டணமெல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க இலவசமாக படிக்கலாம் என்று உலகளவில் புகழ்மிக்க அந்தத் தொழிற்கல்வி நிறுவனம் அறிவித்தது.
லீடு 2020 (Lead 2020) என்ற இயக்கம் மற்றும் GE எனப்படும் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எண்ணற்ற தன்னார்வலர்கள் உதவியுடன் அமெரிக்கா சென்றார் ஶ்ரீகாந்த். படித்து சிறப்பாகத் தேறினார்.
‘‘எங்களிடம் பணிக்கு வாருங்கள் பல லட்சங்களை சம்பளமாகத் தருகிறோம்’’ என்று இவருக்கு உடனடியாக அழைப்பு விடுத்தது அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.
"உங்கள் உதவிக்கு நன்றி. எனக்கு லட்சங்கள் முக்கியமில்லை. லட்சியமே முக்கியம். ஒருவேளை நான் இந்தியப் பார்வையற்ற முதல் குடியரசுத்தலைவர் ஆகா விட்டால் உங்கள் அழைப்பினை ஏற்றுக் கொள்கிறேன்." என்று சொல்லி விட்டு இந்தியா திரும்பினார்.
வந்தும் அவர் சும்மா இருக்கவில்லை... மறுசுழற்சி முறையில் பயன்படுத்தக் கூடிய பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை ஒரு தகரக் கொட்டகையில் எட்டு தொழிலாளர்கள் மற்றும் மூன்று சிறிய எந்திரங்களுடன் ஆரம்பித்தார்.
தனது நிர்வாகத் திறமையாலும் விடாமுயற்சியாலும் அந்த நிறுவனத்தை நான்கு பெரிய நிறுவனமாக ஐம்பது கோடி ரூபாய் வருமானம் தரக்கூடிய நிறுவனமாக வளர்த்தெடுத்தார். அதில் எழுபது சதவீதம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினார். ஸ்ரீகாந்த் இப்போது ஒரு மிகச் சிறந்த தொழில்முனைவோர்.
ஸ்ரீகாந்தின் சோகக் கதையில் என்ன சவால் வந்தாலும் விடாப்பிடியாக அவற்றை எதிர்க்கொண்டு அவர் முன்னேறியதுதான் தெரிகிறது. பார்வையற்றவராக பிறந்தது மட்டுமின்றி, ஏழையாகவும் பிறந்தார். இந்த சமுதாயமும் அவரை எவ்வாறு நடத்தியிருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடிகிறது. இருந்தபோதும் தனக்கு கிடைத்த கல்வியை மிகச் சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற்று இளம் வயதில் ஒரு சிறந்த தொழில்முனைவோராக, தன்னம்பிக்கை பேச்சாளராக உருவாகி, இன்றைய இளைஞர்களுக்கு ஓர் முன் உதாரணமாக திகழ்கிறார்.
எல்லாம் சரி, அப்துல் கலாம் அவர்களிடம் சொன்ன அந்தக் குடியரசுத்தலைவர் கனவு என்ன ஆயிற்று என்று நினைவு படுத்தியபோது அதற்கு ஸ்ரீகாந்த் சொல்கிறார்: "வயது என்ற ஒன்று இருக்கிறது. அந்த வயதில் நிச்சயம் என்னை இந்திய ஜனாதிபதியாக நீங்கள் கண்டிப்பாகப் பார்ப்பீர்கள்".
தன்னால் எதுவும் முடியும் என்று கூறும் ஸ்ரீகாந்த் ஒரு மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி என்றுதான் சொல்ல வேண்டும்...! -
Sathiam Sivam
Hearty congrats and best wishes to Mr. Srikanth.
Grateful thanks to Htay Htay and Facebook.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக