வருட 214 ஆம் நாள்
திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய 03 ஆம் தமிழ் வேதப் பாடல்:-
வாசநன்மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில் திகழ் பூவணத்துறை
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார்வினை
நாசனை அடிதொழ நன்மை யாகுமே
பிரார்த்தனை :
நறுமணம் கொண்ட மலர் மாலைகள் அணிந்து திரு வெண்ணீற்றைப்பூசி பொழில் திகழ் பூவணம் எனும் தலத்தில் உறையும் சிவபெருமானே ! மலர்களால் உம்மை வழிபடும் அடியார்களின் வினையை நாசம் செய்பவர் தாங்கள் . நானும் மலர்தூவி வழிபடுகின்றேன் . என் வினைகளை நீக்கியருளுங்கள் .
தேங்கிய நீரிலிருந்து ஒளிபிறக்கிறது
( நீர்மின்சாரம்) அடக்கிய மனதில் ஆன்ம ஒளி பிறக்கிறது .
வருட 215 ஆம் நாள்
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய 08 ஆம் தமிழ் வேதப் பாடல்:-
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதல் சிந்தாத நன்மணி வந்து என்பிறவித்
தாழை பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ
பிரார்த்தனை :
கருணைக்கடவுளே ! ஏழைத்தொண்டனேன் வீணாக க் காலத்தை கழித்து விட்டேன் . பரம்பொருளாகிய உங்களை பணியத் தவறிவிட்டேன் . இருப்பினும் என் பிறவித் தலையை அறுத்து அருள் செய்த தங்களின் பெரும் கருணைக்கு வந்தனம் ! வந்தனம் !
கொடினும் பேதையும் கொண்டது விடார்கள் .
வருட 216 ஆம் நாள்
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 04 ஆம் தமிழ் வேதப் பாடல்:-
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிப் படக் காய்ந்த
கடல்நாகைக் காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய
என்னும் அஞ்செழுத்தும்
சாம்அன்று உரைக்கத் தருக
கண்டாய் எங்கள் சங்கரனே
பிரார்த்தனை :
தூமென் மலர்களை கணையாகத் தங்கள் மீது தொடுத்த மன்மதனை எரியச் செய்த பெருமானே ! கடல் சூழ்ந்த நாகைக்கரோணத்தில் வீற்றிருக்கும் சிவமே ! தேவரீருடைய திருநாமம் ஆகிய நமச்சிவாய எனும் திருஐந்தெழுத்தை எனது உயிர் பிரிகின்ற காலத்தும் உரைக்குமாறு அருள்வாய் எங்கள் சங்கரனே . உமது திருவடி வாழ்க
காமத்தை அழிப்பது இறைவனின் நாமம்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக