திருப்பாவை - பாடல் 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்
மழை பொழிவதற்கு காரணக் கடவுளான கண்ணா! உன் மழையாகிய குடையில் சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலுக்குள் புகுந்து நீரை முகர்ந்து கொண்டு மிகுந்த ஒலியுடன் வானத்தில் ஏறி ஊழிக்காலத்தில் அனைவரையும் அனைத்தையும் படைத்த முதல்வனான இறைவனின் திருமேனியைப் போல் உன் உடல் கறுத்து, வலிமையும் அழகும் உடைய பத்மநாபனின் கையில் இருக்கும் சுதர்சனச்சக்கரத்தைப் போல் மின்னி அவனது மற்ற கையில் இருக்கும் வலம்புரி சங்கைப் போல் எப்போது நின்று ஒலித்து, தயக்கமே இல்லாமல் அவன் கையில் இருக்கும் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து கிளம்பும் அம்பு மழையைப் போல் நாங்கள் வாழ மழையாகப் பெய்ய வேண்டும். நிரம்பி வழியும் நீர் நிலைகளில் நாங்களும் மகிழ்ச்சியாக மார்கழி நீராடுவோம்! என்று கூறுகிறார் ஆண்டாள்.
நன்றி :
OneIndia.com
https://tamil.oneindia.com/astrology/margazhi-pavai-nonbu-tirupavai-tiruvempavai-songs-4-406276.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக