ஹென்றி
ஜெயகாந்தன் எழுதிய ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலின் மைய கதாபாத்திரம் ஹென்றி எப்படிப்பட்டவன்?
அவன் எப்போதும் கொடுப்பவனாய் இருக்கிறான். அதனால் அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனிடம் இருக்கிற எதையும் அவன் கொடுப்பதற்கு தயங்குவதில்லை. அவனுக்கு பிறரும் தன்னின் அம்சம் தான். பிறர் என்கிற பதமே அவன் அகராதியில் இல்லை. அவனுக்கு ஆபாசமாக எதையும் பார்க்க தெரியாது. அவனுக்கு வெறுப்பென்றால் என்னவென்றே தெரியாது.
அவன் உலகத்தில் போட்டி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது. அவன் ஒரு உலகாந்திரி. அவனின் உலகம் ஒரு குடையின் கீழ் வந்து விடுகிறது. அவனுக்கு எல்லோரும் நல்லவர்களே. அவனுக்கு கெட்டதே என்னவென்று தெரியாது.
உணர்விற்கு மதிப்பளிப்பதே அவனின் அறம். அவன் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். எத்தனை வலிகள் அவனின் புறத்தை வந்து தாக்கினாலும், அவனின் அகம் சாசுவத மகிழ்ச்சியில் திளைக்கிறது. அவனுக்கு அன்பை அன்போடு கொடுக்க மட்டுமே தெரியும்.
அவன் கடலின் ஒரு துளி. பிரபஞ்சத்தின் அம்சமாக தன்னை உணர்கிற அவன் பிரபஞ்சத்தையே நேசிக்கிறவனாக இருக்கிறான். அன்பை தவிர அவனிடம் வேறெதுவும் பிரத்யேகமாக இல்லை. ஆனால் அட்சயபாத்திரமாய் அன்பை அவன் சுரந்து கொண்டே இருக்கிறான். அதில் மெய்காதல் ததும்பி வழிகிறது. நிறமற்ற ஈரமாய் அது கதகதப்பின் வாசனையோடு சுரந்து கொண்டே இருக்கிறது.
அவன் எப்போதும் மற்றவர்களோடு தன்னையோ, வேறு யாரையோ ஒப்புநோக்குவதே கிடையாது. அதை அதை அப்படி அப்படியே ஏற்றுக் கொள்கிறவனாக இருக்கிறான். கடலின் அத்தனை துளிகளிலும் ஒரே துளியையே தரிசிக்கிறான்.
அவனின் அப்பா ரத்த உறவினால் வந்த உறவல்ல. ஆனால், அவர் மீது உயிரையே வைத்து இருக்கிறான். அவரை போலவே நொடியில் சொத்துகளை அவனால் அதன் மீது இச்சை உள்ள உறவுகளிடம் கொடுத்து விட்டு செல்ல முடிகிறது.
லௌகீக தேடலில் அவன் மனம் எப்போதும் லயிப்பதில்லை. அவன் இதயத்தில் எந்தவித பேதங்களும் இல்லை. விளிம்பற்ற பேரன்பு மட்டுமே அவனின் அடையாளமற்ற அடையாளமாக இருக்கிறது.
அவன் நேசத்தை நேசிக்கிறவனாக இருக்கிறான். அவன் ஒரு பிரபஞ்ச காதலன். அவன் விருப்பும் வெறுப்பும் அற்ற ஜென் மனநிலையில் இருக்கிறான்.
அவனின் அடையாளம் அற்ற அடையாளங்களில் ஒரு பரவச தருணம் உட்புகுந்து, என் அடையாளமற்ற அடையாளங்களை அதனுள் உணர்த்தி இருக்கிறது.
அதனால் அவனின் அறம் மையத்திலேயே இயங்குகிறது. மனிதத்தின் ஈரம் வற்றாமல் இருக்கிறது. அவன் சாசுவத காதலின் அம்சமாக இருக்கிறான்.
அதனாலேயே மனநிலை பிறழ்ந்து நிர்வாணமாக யாரோடும் பேசாமல் சுற்றிக் கொண்டிருக்கிற பேபி என்கிற இளம்பெண் இவனிடம் மட்டும் பேசுகிறாள்.
இவன் பேச்சு கேட்டு நதியில் நீராடுகிறாள். இவனிடம் உணவு பெற்று பசியாறுகிறாள். அவன் தரும் உடையை அணிந்து கொள்கிறாள். அவனிடம் அவளை தரிசிக்கிறாள்.
படிப்படியாய் பழக ஆரம்பிக்கிறாள். மந்தகாச புன்னகை பூக்கிறாள். பூத்தலை அறிந்தேயிராதிருந்தவள், பூத்தலாகிறாள். பரிபூரண நேசம் கொள்கிறாள். அவள் மீது தேங்கிப் போயிருக்கிற சமூகம் வீசிய ஆபாச பார்வைகளை அவனோடான நீராடல் தோய்த்து நிரமற்ற நிறத்திற்கு அவள் மனதை திருப்பி அழைத்துச் செல்கிறது.
அவள் ஆண்டாளின் இன்னொரு வடிவம். காலங்கள் எத்தனை கடந்திருக்கிறபோதும், உணர்வுகளால் அவளுக்குள் ஆண்டாளின் ரணங்கள், நிறைவேறாத காதல், ஆபாசப்படுத்தப் பட்டிருக்கிற காமத்தின் ரணம் என்று எல்லாம் அப்படி அப்படியே தான் இருக்கிறது.
அவனின் பழக்கத்தில் அவள் தன் சுயத்தை அவன் வழியாக உணர்கிறாள். அவள் தேவதையாக பரிமளிக்க துவங்குகிறாள்.
அப்படியான ஆச்சர்யங்களை அநாயாசமாக ஹென்றியால் நிகழ்த்த முடிகிறது. ஹென்றியின் மனநிலை வாய்க்கிற போது, காலங்கள் அத்தனையும் வசந்த காலமாக பரிமளித்து விடுகின்றன.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக