20 டிச., 2023

நூல்நயம்

"வேதபுரத்தார்க்கு."
கி ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னம் பதிப்பகம் வெளியீடு விலை ரூபாய் 150 மொத்த பக்கங்கள் 184 முதல் பதிப்பு 2014.

எனது 16ஆம் வயதில் முதன் முறையாக வேதபுரி வந்து சென்றிருக்கிறேன். மொத்தம் ஐந்து முறை அப்போது சென்று வந்திருக்கிறேன்.
அப்போதைய வேதபுரி இப்போது புதுவை என்றும் புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படுகிறது .எவ்வளவோ மாறிவிட்டது .இரண்டு வருடங்களுக்கு முன் சென்று வந்த போதும் கூட அந்த மாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத வண்ணம் இருக்கிறது.

           இந்தக் கதையைப் படிக்கும் பொழுது நெஞ்சின் ஒரு ஓரத்தில் புளியமரத்தின் கதை வீச்சமும் ,குழந்தைகள் பெண்கள்ஆண்கள் வாசமும் , பதினெட்டாவது அட்சக்கோடு நெடியும்,,அஞ்சாடியின்  நெஞ்சைத் தொடும் வரிகள் வந்து வந்து போகிறது.
                 எனது பாட்டனார் ,அவரின் முப்பாட்டனாரின் கதைகளை ,வாழ்ந்த கதை வீழ்ந்த கதை ,என்னை தோளில் போட்டுக் கொண்டு தாலாட்டிக்கொண்டு சொன்ன விதம்,பதம், நூறு சதம் நினைவுகள் இந்த புத்தகம் படிக்கும்போது வந்து போகிறது.
            கி .ராஜநாராயணன் அவர்களை ஒரு சகாப்தம் என்று சொல்லலாம் .என்றும் இளமை முறுக்கோடு உள்ள தெளிவோடு தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நிகழ்வு"(லெஜன்ட் ) அவர். இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் நிகழ்வு அவர்.
       தன் துணையை இழந்து' தனிமைத் தவம்' செய்து கொண்டிருக்கிறார்.
    வேளாண் கல்லூரியில் படிக்கும் பொழுது கல்வி சுற்றுலா பயணமாக கோவில்பட்டி விவசாய பண்ணைக்கு சென்றோம். அப்பொழுது நண்பர் கவிஞர் ,ஓவியர், திரைப்பட இயக்குனர் ,கங்கைகொண்டான் அவர்கள் இடைசேவல் கிராமம் அழைத்துச் சென்று காணும் பாக்கியம் பெற்றேன். அப்பொழுதெல்லாம் அவரின் அருமை பெருமை எனக்கு தெரியாது. கரிசல்காட்டு கதைகள் இவரால் பெயர் பெற்றது . அந்த மக்களின் மொழியில் மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் .
   
      கரிசல் காட்டுப் பகுதியில் பிறந்தவர்கள் வெக்கை குடிப்பவர்கள.இவர்களுக்கு எந்த வித சுக வாழ்வு சம்பந்தமும் கிடையாது. விவசாயிகள் தினம்தோறும் வானத்தை பார்த்து மானத்தை காப்பவர்கள். அப்படிப்பட்ட  மக்களின் உணர்வுகளை தின பாடுகளை தனது வெற்றி மொழியால் உலகிற்கு காட்டியவர் கி .ராஜநாராயணன் அவர்கள்.
             அழகிரிசாமி அவர்களும்,கி. ரா. அவர்களும் பால்யகால நண்பர்கள் ;ஒரே தெரு வாசிகள்.;இருவருமே சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள்.
            மண்ணையும் அதில் வாழும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல .ஆப்பிரிக்கா எழுத்தாளர்களுக்கு கிடைத்துள்ள உலக அங்கீகாரம் போல கி. ரா. அவர்களுக்கு கிடைக்கவில்லை . புதுவை பல்கலைக்கழகத்தின்* நாட்டார் வழக்காற்றியல் *துறையின் "வருகைதரு பேராசிரியராக "பணியாற்றியவர். 
              கரிசல் எழுத்துக்கு இவர் பீஷ்மர் .புது எழுத்தாளருக்கு இவர் துரோனாச்சாரியார். படித்து பாடம் பெறலாம்.
    '  தூங்காதிருக்க மருந்து 'என்று சொல்லப்படுகிற 'தேயிலை 'ஊருக்குள்ளே எப்படி வந்து எல்லோரையும் ஆட்கொண்டது என்று இவர் தெளிவாகவும் விளக்கமாகவும்  எழுதியது பிரமிக்கத்தக்கது. அதேபோல கழுவேற்றுதல் என்கிற ஒரு நிகழ்வை சரித்திரத்தை இவர் கதை மூலமாக படிக்கலாம் ;படித்து தெரிந்து கொள்ளலாம்.
  பல கதைகள்  பிரெஞ்சு மொழியில், பல மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .
        நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து ,அது தனிவகை இலக்கியம் என்று பல ஆண்டுகால அவரின் முயற்சி தற்பொழுது ஆயிரம் பக்கத்திற்கு மேலான புத்தகமாக வெளிவந்துள்ளது .
      கரிசல் வட்டார சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கியிருக்கிறார் .
     கடித இலக்கியம் என்ற வகையை மேம்படுத்தியது அவரது கடிதங்கள். கு. அழகிரிசாமி க்கும்  நண்பர்களுக்கும் அவர்கள் எழுதிய கடிதங்கள் ஆழமான இலக்கியத் தன்மை கொண்டது .

******

வேதபுரத்தார்க்கு .இது கிராவின் சுயசரிதை புத்தகம் .நான்கு தொகுதிகளாக எழுதி வெளியிட நிர்ணயிக்கப்பட்டது .முதல் தொகுதி இது .கி.ரா. அவர்கள் தனது 90 ஆவது வயதில் தீராநதி இதழில் 
 எழுதி பின் புத்தகமாக வெளியிடப்பட்டது.

       "வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு" என்று ஒரு தொடரை தான் கி.ரா. 
எழுதினார் .வேதபுரம் என்பது பாண்டிச்சேரி குறிக்கும் .பாண்டிச்சேரியில் குடியேறிய,பாரதி, பாரதிதாசன் கி.ரா.போன்றவர்களை குறிக்கும் .வேத புரத்தில் குடியிருப்பவர்களுக்கு ஒரு நல்ல குறிசொல் சொல் என்பதாக இந்த தொடரை எழுதினார் .ஆனால் இது முற்றிலும் முழுக்க முழுக்க சுயசரிதை என்றே சுயதம்பட்டம் போல சொல்லப்பட்டு எழுதப்பட்டது .ஆனால் பல விஷயங்கள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

     90 வயதில் இவ்வளவு ஆச்சரியப்படத்தக்க நினைவாற்றல் கொண்டு எழுதியிருக்கிறார். தி.க.சி.தூண்டுதலும் கூட இது எழுதிடக் காரணம் என்று அவரே சொல்லியிருக்கிறார்.
1989இல் வேதபுரத்திற்கு குடியேறுகின்ற நிகழ்வோடு இந்த சுயசரிதம் தொடங்குகிறது.

         வேதபுரம் என்பது எல்லோருக்குமே,எல்லா ஊருக்கும்  பொருந்திப் போகின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

      முப்பது அத்தியாயங்களில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

கி ரா அவர்களின் புதுச்சேரி நகரத்தின் வாழ்க்கை பதிவுகள் அடங்கியது  தான் இந்த புத்தகம் இருக்கும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால் ஆரம்பத்தில் அப்படி இருக்கும் .போகப்போக வேறு திசையில் மாறி செல்கிறது.

         பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டது, அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக்கு திட்டமிட்டது உதவியாளர்களை உருவாக்கிக் கொண்டது ,துறை மாணவர்களோடு உரையாடியது என்பதாக இந்த கதை விரிகிறது.

       பள்ளிக் கல்வியை கூட முடிக்காத கி.ரா. அவர்களை புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக
 துணைவேந்தர் க.வெங்கட சுப்பிரமணி அவர்கள் நியமித்தார்கள்.

          அப்போது இருந்து 25வருட புதுச்சேரி வாழ்க்கை நிகழ்வுகளை மட்டும் இதில் எழுதப்படும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன் .ஆனால் நிறைய மாற்றங்களை உட்படுத்தி ஒரு கதை சொல்லியாக இதனை எழுதி இருக்கிறார் கி.ரா. அவர்கள்.
  தனது கிராம வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு வேதபுரம் வந்து அதன் அடையாளத்திற்குள் இருக்கும் ரகசியங்களை தேடி தேடி கண்டுபிடித்த ரகசியங்களை சுவராசியமாக சொல்வதாகவும் இருக்கிறது அவரின் எழுத்து.

  கி.ரா அவர்கள் இந்த புத்தகத்தில் ஒரு வாசகத்தை எழுதியுள்ளார் ."எல்லா சகதிகளிலும் தாமரை பூப்பதில்லை "
என்று .
ஆனால் கி.ரா. என்கிற தாமரைப்பூ எந்த சகதியிலும் பூக்கும் ஒரு உன்னதமான பொன் தாமரைப்பூ என்பதில் ஐயமில்லை.

        ஆறி விட்ட இட்லி சாப்பிடுவது நன்றாக இருக்காது.இதை விட மிக மோசமானது.
ஆறி விட்ட தோசை சாப்பிடுவது .இதற்கு தணிகாசலம் என்கிற கி.ரா.அவர்களின் உதவியாளர் சென்னாங்கண்ணி பொடி தொட்டு சாப்பிடுகிறார் . அவ்வளவு அருமையாக சுவையாக இருக்கிறது.அதுகுறித்து தெனாலிராமன் கதை கூட எடுத்து விடுகிறார் .நான் முதன்முதலாக கேள்விப்பட்டேன் . சென்னாங்கண்ணி  பொடி குறித்து என் மனைவிக்கு தெரியும் என்று சொன்னார். எனது பாண்டிச்சேரி நண்பர்களிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறேன் .கிடைத்தால் வாங்கி அனுப்பும்படி...

         மீரா ஒருமுறை வீட்டுக்கு வந்தபோதும், இயக்குனர் பார்த்திபன் ஒரு முறை வீட்டுக்கு வந்த போதும் கோழி கறி சாப்பாடு போடுகிறார்.கோழிக்கறி சமையல் குறித்து ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார்.

     வெள்ளக்கால் என்ற ஊரில் *தேள்* இருப்பதில்லை என்ற ஒரு தகவல் பதிவு செய்யப்படுகிறது..

*சொல்லடி சொல்லடி சக்தி மாகாளி வேதபுரத்து நல்ல குறி சொல்லு *
என்று வேண்டுகிறான் பாரதி .அந்த வரிகளை தான் கீழ அவர்கள் புத்தக தலைப்பாக வைத்திருக்கிறார்.

              30 ஆவது அத்தியாயத்தில் ஆயுள் இருக்கும் வரை *அதை* எழுத முடியும் மட்டுமே எழுதலாம் அல்லது சொல்லலாம் என்கிறார் .*அதை *என்று சொன்னவுடன் எனக்கு வேறு நினைவு போய்விட்டது. ஆனால் அவர் சொல்வது வேறு உயில் எழுதிவிட்டு சொல்வார்களே அதை குறித்து சொல்கிறார் .

    நண்பர்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் .அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு கதை சொல்லுகிறார் .

        .ஒரு பெண் விருப்பப்பட்டால் ,
   ஒரு பெண்ணின் வாய்விட்டு கூப்பிட்டு விட்டால் மறுக்கக் கூடாது என்பது நாட்டுப்புறத்தில் இப்பவும் சொல்லுகிற வார்த்தை.

      காம பசியில் துடிக்கும் ஒரு பெண் அரசனை கண்டதும் காதல் ஆகிவிடுகிறாவள் அரசரும்  காதலோடு திருப்தி செய்கிறான் .அப்போது அவள் சொன்னாளாம்," நீ நல்லா இருக்கனும்". என்று .

     அதுபோல என்னுடைய அருமை நண்பர்களுக்கெல்லாம் நான் நன்றி தெரிவிக்க இதுவே தக்க சமயம் ."நல்லா இருங்க "என்று சொல்லுகிறார்.

      எனது உடலை எரித்து சாம்பலாக்கி விடுங்கள் .துக்கத்தை எப்போதும் கொண்டாடாதீர்கள்.
பிறந்தநாளை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள் .

    "எனக்கு நினைவு என்பது எனது எழுத்துக்கள் மட்டும் தான்" என்று முடிக்கிறார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை: