28 ஜூன், 2024

நூல் நயம்

#வாசிப்பு_பெருவோட்டம்2024
#24RM090
#49/30
#புத்தகம்: கலைச்செல்வங்கள்
#ஆசிரியர்:  இரா.நாகசாமி
#தலைப்பு: கலை சார் படைப்புகள்
#பக்கங்கள்: 107
அக்கால மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்துகொள்ள எளிதில் உதவுவது அக்கால சிற்பங்களும், கோயில்களும், கல்வெட்டுகளும், ஓவியங்களும் தான். கலைச்செல்வங்கள் என்ற இந்நூல் 1961-ல் வெளியானது. இந்திய நாட்டின் சிற்பம், கோயில், ஓவியம், செப்புச் சிலை இவற்றைப் பற்றி சற்று விரிவாக இந்நூலில் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். நாம் பள்ளிப் பருவத்தில் சமூக அறிவியல் பாடத்தில் அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களைப் பற்றி படித்தது நினைவில் வரும் வாசிக்கையில். இந்த குகை ஓவியங்களையுமு, கல்வெட்டுகளையும் வாசிக்கும் போது நேரில் கண்டால் எவ்வளவு இன்பமாக இருக்கும் என மனம் ஒரு நொடி எண்ணியது; கனவு பிண்ணியது. என்றாவது வாய்ப்பு அமைந்தால் இன்பமே! கோயில்கள் இல்லாத ஊரே இல்லை எனலாம் இன்று. கோயில்கள் பற்றிய விளக்கம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. நம் கனவு தேவதை குந்தவையும் அப்பகுதியில் வந்து போவார். ஆக இந்நூல் பழங்காலத்தை பற்றி அறிய ஏற்புடையதாக உள்ளது.

இந்நூலின் ஆசிரியர் டாக்டர்.இரா. நாகசாமி அவர்கள் கோவை மாவட்டம் ஊஞ்சலூரில் 1930-ல் பிறந்தவர்; தொல்லியல் பட்டம் பெற்றவர்; சங்க இலக்கியம் முதல் அண்மைக் கால இலக்கியம் வரை தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இவரது கட்டுரைகள் யுனெஸ்கோ நிறுவனத்தால் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. 22 ஆண்டுகள் தமிழகத்தின் கல்வெட்டிலும், கலைகளிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர். கர்நாடக இசைப் பாடல்கள் பல இயற்றியவர். 'சிலை மீட்ட செல்வர்',  கலைமாமணி (தொல்லியல் துறை) பட்டம் பெற்றவர். இவர் சமஸ்கிருத கண்ணோட்டத்தில் அதிகம் பார்ப்பவர் என்ற விமர்ச்சனத்துக்கு உள்ளானவர். உண்மையும் கூட.

🌹'சிற்பங்கள்' பற்றி முதலில் விளக்குகிறார். மௌரியர் காலத்து கலையைப் பற்றி கூறுகையில் அசோகரைப் பற்றியும், அக்காலத்தில் தான் சிற்பக்கலை வளம்பெற்றது எனவும் கூறுகிறார். புத்தபிரான் எடுத்துரைத்த சாரநாத்தில் அசோகன் நட்ட கல்தூண் தான் மிகவும் புகழ் பெற்றது. பார்குத் என்ற இடத்துச் சிற்பமும், சாஞ்சி ஸ்தூப வாயில்களும் இந்திய சிற்பங்களில் மிக முக்கியமானவை. கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த முதல் பகுதி சிற்பங்கள் மிகப் பழமையான வளைவுகளற்றதாக உள்ளன என்கிறார். குப்தர்கள் காலமே பொற்காலம். எளிமையும், வனப்பும், தெளிவும் உள்ள சிற்பங்களும், சிலைகளும் உருவான காலமே குப்தர்கள் காலம் தானாம். குஷாணர்களின் காந்தர சிற்பக்கலை, சாளுக்கியர் கால குகைக் கோயில்கள், பல்லவர் கால சிற்பங்கள், மாமல்லபுர சிற்பங்கள், திருச்சி குகைக்கோயில், கி.பி. 850-ல் சோழர் கால சிற்பங்கள், பாண்டியர் காலத்தில் நடந்தவை, விஜயநகரப் பேரரசில் வீழ்ந்தவை, கலிங்கரது சிற்பக்கலை (உள்ளமும், உடலும் இணைந்து நிற்கும் காதலர்களின் சிலைகள்), முகமது கஜினி படையெடுப்பால் சூரையாடப்பட்ட கலைச்செல்வங்கள், பாலசேனர்களின் சிற்பங்கள் என தகவல் களஞ்சியமாக உள்ளது இந்நூல். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என்னென்ன நடந்தது, எந்த அரசு ஆட்சி செய்தது, சிற்பக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆட்சி எது என்பதை சற்று தெளிவுற எழுதியுள்ளார். வீரக்கல் - நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரனுக்காக நடப்படும் கல் (நடுகல் என சங்க இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும்) சதிக்கல்  - மாண்டுவிட்ட கணவருடன் மகளிர் தீக்குளிப்பது, நாகக்கல் - மணமுடித்து பல ஆண்டுகள் குழந்தையில்லாதவர்கள் அரசமரத்தடியில் நாகக்கல் நடுவது என 'நினைவு சின்னங்கள்' தலைப்பில் கூறியிருக்கிறார். 

🌹"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா" என்பதிற்கேற்ப கோயில்கள் பற்றி இந்நூல் அதிகமாக விவரித்துள்ளதை காணமுடிகிறது.  'கோயில்கள்' என்ற தலைப்பில், கோயில்கள் தோன்றிய காலம் முதல் இன்று வரை பெற்றுள்ள வளர்ச்சியை இந்நூலில் காணலாம். சிந்துநதிப் பண்பாட்டைச் சார்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளில் கோயில்கள் இல்லையென சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாக இந்நூல் கூறுகிறது. மௌரியர் காலத்திலிருந்தே அசோகன் புத்தரின் பொன்மொழிகளை பாறைகளில் பொறித்தான். குகைகளை குடைந்து அஜிவகர்கள் என்ற துறவிகள் வசிக்க வழி வகுத்தான். 84000 ஸ்தூபங்களை அசோகர் அமைத்ததாக கூறப்படுகிறது. குகைகளில் வழிபாடு நடந்த காலமும் அதுதான். குப்தர்கள் காலத்தில் கட்டிடக்கலைகளை பௌத்த குகைகள், இந்துக் குகைகள்,கோயில்கள் என மூன்றாக பிரித்துள்ளார் ஆசிரியர். 28 குகைகள் உள்ளதாம் அஜந்தா குகையில். சீனப் பயணியான யுவான்சுவாங் நம் நாட்டில் தோன்றிய பல கோயில்களைப் பற்றி எழுதியுள்ளார் என ஆசிரியர் தெளிவுப்படுத்துகிறார். இந்துக்கள் சிலைவழிபாட்டை புத்த மதத்திற்கு பிறகு தான் தழுவியிருக்க வேண்டுமென இந்நூல் கூறுகிறது. ராஜசிம்மன் காலத்தில் தான் தென்னாட்டில் கல்லிலாலான கட்டிடக்கோயில்கள் தோன்றியிருக்கின்றன. காஞ்சியில் உள்ள கைலாயநாதர் கோயிலும், மாமல்லபுரத்து தலசயனப்பெருமாள் கோயிலும் ராஜசிம்மன் காலத்தவை தானாம். சோழர்கள் காலத்தில் தான்  தென்னாடு முழுவதும் கோயில்கள் பெருக்கெடுத்திருக்கின்றன. உத்தமச்சோழரின் அன்னையான செம்பியன் மாதேவி பக்தி பூண்டு பல கோயில்கள் தோன்றப் பேருதவி செய்திருக்கிறார். குந்தவை பிராட்டியாரும் பல கோயில்களுக்கு பொருளுதவி செய்திருக்கிறார் என வாசித்தபோது 'பொன்னியின் செல்வன்' நினைவில் வந்து நின்றது. கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர் கோயில்களைப் போன்று, சிறு அளவில் கல்லினால் ஆன கோயில்கள் தோன்றின. இவற்றில் முக்கியமானவை புதுக்கோட்டை நகரைச் சுற்றிலும் உள்ளன என்கிறது இந்நூல். திருக்கட்டளை சுந்தரேஸ்வர் கோயிலும், நார்த்தாமலை விஜயாலயர் கோயிலும், கொடும்பாளூர் மூவர் கோயிலும் இவற்றில் முக்கியமானவை. திருச்சி சீனிவாசநல்லூரில் உள்ள குரங்கநாதர் கோயில், கி.பி.1000 -த்தில் தஞ்சை பிரஹதீஸ்வரர் பெரிய கோயில் (190 அடி உயரம்) என விவரித்துள்ளார் ஆசிரியர். என்னதான் மூவேந்தர்களுக்குள் சண்டை நடந்தாலும் அவர்கள் கோயில்களை அழிக்கவில்லை; சிதைக்கவுமில்லை. ஆனால் வட இந்தியாவில் கலைச்செல்வங்கள் அழிந்தன. கஜினி முகமது போரிட்டு பல இந்து கோயில்களை அழித்து மசூதிகளாக மாற்றினான். பாண்டியர் காலத்து கோயில்கள், கும்பகோண கோபுரங்கள், விஜயநகர உயர்ந்த கோபுரங்கள், மதுரை கோபுரக்கலையின் உன்னத நிலை, ராஜஸ்தானின் ஜைனர் கோயில்கள், சாளுக்கியரின் ஹோய்சாளர் கோயில்கள், கேரளாவின் மரக்கோயில்கள் என கோயில்களின் சிறப்புகளை வாசித்து வாசித்து அறிவதோடு மகிழவும் செய்யலாம்.

🌹கல்வெட்டுக்களைப் போல இந்திய சரித்திரத்தை வரையறுத்து கூறுவது சாஸனங்கள். சாஸனங்கள் பொறித்து வைக்க கல், செப்பேடுகள், ஓலைகள், செங்கற்கள் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. பல மன்னர்கள் தாங்கள் செய்த கொடைகளைச் செப்பேடுகளில் பொறித்து வைத்துள்ளனர். அசோகன் தர்மத்தைத் தூண்களில் பொறித்து வைத்துள்ளான். செம்பியன் மாதேவியாரது புகழை சோழர்களின் கல்வெட்டுக்கள் கூறுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு அக்காலத்து மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் விதம் பற்றியும், மக்களின் கல்வி, நிலை, பொருள், குடவோலைச் சீட்டுகள் பற்றியும் விளக்கமாக கூறுகிறதாம். சரித்திர வரலாறுகளை கூறும் கல்வெட்டுகளில் இரண்டு வித எழுத்துக்கள் அசோகர் காலத்தில் இருந்ததாகவும், இன்று வரை அது பல மாறுபாடுகளைப் பெற்றுவிட்டது எனவும் இந்நூல் கூறுகிறது. மொஹஞ்சதாரோ முத்திரைகளில் உள்ள எழுத்துக்கள் சித்திரம் போன்றவை எனவும், கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை பிராம்மி எழுத்துகள் வளர்ந்து வந்ததாகவும், கிரந்தம், தமிழ் இரண்டும் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தான் இரண்டாகப் பிரிந்தன எனவும் அரிய தகவல்களை அள்ளித் தருகிறார் ஆசிரியர்.

🌹ஓவியங்களை பிடிக்காதவர்கள் நம்மிடையே இருக்க வாய்ப்பில்லை; உணர்ந்து கொள்ள, புரிந்து கொள்ள மொழியே தேவையில்லை. தென்னிந்தியாவில் தொல்காப்பியம் ஓவியக்கலையைப் பற்றி கூறுகிறது. நம் நாட்டின் பழமையான ஓவியங்கள், உள்ளம் கவர்ச் சித்திரங்கள், உலகம் போற்றும் வண்ணப் படைப்புகள் அஜந்தா குகைத் தொடரில் தான் இருக்கின்றன. பல்லவர்கள் காலத்தில் சித்தன்னவாசல் ஓவியங்கள் சிறப்பு பெற்றவை. இசைப் பண்கள் அல்லது ராகங்களை உருவகப்படுத்தி ஓவியங்களாகத் தீட்டிய பெருமை ராஜஸ்தானத்து ஓவியர்களுக்கே தகும். நீண்ட தாமரை போன்ற கண்கள், அலையென நெகிழும் கூந்தல்கள், கனத்த மார்பகங்கள், மெல்லிய இடைகள், சிவந்த கைகள் உடையவராக இவர்களின் ஓவியங்கள் அழகைக் கூட்டுகின்றன. மொகலாய மன்னர்கள் ஓவியக் கலையையும், கட்டிடக் கலையையும், நெய்தல் கலையையும் போற்றி வளர்த்தனர். காதல் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஹம்ச நாமா ஓவியங்கள் துணியில் தீட்டப்பட்டன. அக்பர் 1375 ஓவியங்களைக் கொண்ட ஹம்ச நாமாவை மிகவும் விரும்புவாராம். அக்பருக்கு பின் ஜஹாங்கிர் ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். நாயக்கர் காலத்து ஓவியங்கள் சிதம்பரம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களில் காணப்படுகிறது. வட இந்தியாவில் கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சுவரில் ஓவியங்கள் தீட்டுவது மறைந்துவிட்டது. தஞ்சை ஓவியங்கள், தக்காண ஓவியங்கள், குஜராத், பீஹாரி ஓவியங்கள் என கண்கள் அழகாகிறது ஓவியங்களைப் பற்றி வாசிக்கும் போது...

🌹செம்பாலான வார்ப்புச் சிலைகளான செப்பு சிலைகளைப் பற்றி இறுதியில் கூறியிருக்கிறார். உலகிலேயே வார்ப்புக் கலையில் உன்னத நிலையை அடைந்திருப்பது தென்னாடு. சைவர் கோயில்களில் சிவகாமி அம்மையை அருகிலிருத்தி நடராசர் ஆனந்த தாண்டவமாடும் காட்சியை எங்கும் காணலாம். தென்னகத்தில் சோழர் காலத்தில் தான் செப்புச் சிலைகள் அதிகம் தோன்றியுள்ளது. தஞ்சைக் கலைக்கூடத்தில் கல்யாண சுந்தரர், பிஷாடனபைரவர், ரிஷாபாந்திகர் சிலைகள் அழகு மிகுந்தவை. திருவெண்காட்டிலிருந்த சமீபத்தில் கிடைத்த அர்த்தநாரீஸவரர் படிமமும், சண்டேச்வரர் படிமமும் ராஜராஜசோழன் காலத்தவை. அழகான செப்புச்சிலைகள் இன்று தமிழகத்தின் பல கோயில்களில் காணலாம் என்கிறது இந்நூல்.  சென்னைப் பொருட்காட்சி சாலையில் உள்ள தொல்பொருள் பிரிவில், இந்துக்களின் சிற்பங்களனைத்தும் ஒரு தனி அறையிலும், பௌத்த சிற்பங்கள், சமண துறவிகளின் சிலைகள், குப்தர்களது பொன்னான சிற்பங்கள் என ஒவ்வொரு அறையிலும் வைக்கப்பட்டுள்ளது. பட்டிப்ரோலு என்ற இடத்தில் கிடைத்த ஸ்படிகக் குவளைகளும், தங்கமலர்களும், மணிகளும் பௌத்த சிற்பங்கள் உள்ள அறையில் இருக்கிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ஸ்படிக குவளைகளைக் கண்டு அக்காலத்திய நுண்ணறிவை உலகம் போற்றுகின்றது.

சமீபத்தில் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் 'ஆண்டாள்' கோயிலுக்கு சென்று சிற்பங்களையும், வட்டெழுத்துக்களையும் கண்டு வியந்தேன். இந்நூலை வாசிக்கையில் அக்கோவிலின் ஞாபகம் தான் வந்து சென்றது. பல வரலாற்று குறிப்புகளும், கல்வெட்டுக் குறிப்புகளும், அழகான செப்புச் சிலைகள் குறிப்புகளும், அழகழகான ஓவியங்களும், கோயில்களின் சிறப்புகளும் நமக்கு பெரிதும் உதவும் வகையில், பல தகவல்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் சிறப்பு பெறுகிறது. வாசித்து நம் முன்னோர்களின் சிறப்புகளையும், கலைகளின் சிறப்புகளையும் அறிந்து இன்புறலாம். கோயில்கள் இல்லாத காலத்தில் மக்கள் எவ்வாறு இருந்திருப்பர் என கற்பனையில் நம் மனதை மிதக்கவிடலாம் கோயிலின் உள்ளே அமர்ந்து; தியானித்து. கோயில்களுக்கு இன்று மக்கள் தரும் முக்கியத்துவத்தை எண்ணி வியப்படையலாம். 

வியப்புடன்,
ரசல்🌹

கருத்துகள் இல்லை: