செப்டம்பர் 5: வ.உ.சி.யின் பிறந்த தினம்:
.................................
*செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.................................
*தியாகிகள் செய்த தியாகங்களைப் போற்றுகிறோம். கூடவே தியாகிகளின் உறவினர்கள் செய்த தியாகங்களையும் நாம் போற்றுகிறோமா? மீனாட்சி சுந்தரம் யார் என்றோ மீனாட்சி சுந்தரத்திற்குப் பித்துப் பிடித்தது ஏன் என்றோ நாம் அறிவோமா?
மீனாட்சி சுந்தரம் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சொந்தச் சகோதரர்.
வ. உ.சி., சுதந்திரப் போரில் கலந்துகொண்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறைப்பட்டார். அதாவது நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை.
அண்ணன் சிறையில் நாற்பது ஆண்டுகள் வாழவேண்டும் என்ற செய்தியை முதன்முதலில் அறிந்ததும், அந்த அதிர்ச்சியில் திடீரென்று அவர்மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்த தம்பி மீனாட்சி சுந்தரத்திற்குப் பித்துப் பிடித்துவிட்டது. ஏதேதோ உளறியவராய்த் தெருவில் ஓடத் தொடங்கினார்.
பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ஆனால் தம் வாழ்நாளின் இறுதிவரை பித்தராகவே இருந்த அவர் சுதந்திரம் கிடைப்பதற்கு நான்கு ஆண்டுகள் முன் காலமானார்.
*வ.உ.சி. தாய்நாட்டிற்காகக் கோவைச் சிறையில் செக்கிழுத்த செய்தி அனைவரும் அறிந்த செய்தி. கையில் விலங்கிட்டு அவரைச் சிறையில் அடைத்த ஆங்கிலேய அரசு விலங்கு செய்ய வேண்டிய பணியை அவர் செய்யவேண்டும் என வற்புறுத்தியது.
செக்கை மாடுகள்தான் இழுக்கும். ஆனால் மாட்டிற்கு பதிலாக வ.உ.சி.யைச் செக்கில் பூட்டி அவரைச் செக்கிழுக்க வைத்தார்கள். `செக்கிழுத்த செம்மல்` என்றே பின்னர் வ.உ.சி. அறியப்பட்டார்.
அவர் கோவைச் சிறையில் பட்ட துன்பங்களை அறிந்த அவரது நண்பரான மகாகவி பாரதியார், வ.உ.சி.யை அடைத்து வைத்திருந்த கோயமுத்தூர் சிறைச்சாலையை "ஸ்ரீ பாரத நாட்டின் புதிய புண்ணிய ஸ்தலம்" என்று குறிப்பிட்டார்....
*வ.உ.சி. 1872 செப்டம்பர் ஐந்தாம் தேதி பிறந்தவர். தந்தை உலகநாதர் புகழ்பெற்ற வழக்கறிஞர். தாய் பரமாயி அம்மாள். திருநெல்வேலி அருகேயுள்ள ஒட்டப் பிடாரம் தான் அவர் பிறந்த ஊர்.
திலகரின் அரசியல் இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் வ.உ.சி. திலகரின் எழுத்தும் பேச்சும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பின்னாளில் `திலக மகரிஷியின் வரலாறு` என்ற தலைப்பில், அவரை மகரிஷியாகவே உணர்ந்து ஒரு வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதினார் அவர்.
திலகர் குறித்த பல செய்திகள் அடுத்தடுத்து வ.உ.சி.யின் செவிகளை வந்தடைந்தன. இச்செய்திகளால் தம் பந்த பாசங்கள் அனைத்தையும் துறந்து இந்தியத் தாயின் மகன் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கியவராக வ.உ.சி. மாறினார். நாட்டு விடுதலைக்காக தமது அனைத்துச் செல்வத்தையும் அர்ப்பணிக்கத் தயாரானார்.
பள்ளிப் படிப்பு முடிந்து சில ஆண்டுகளில் சட்டப் பள்ளியில் சேர்ந்து சட்டப் படிப்பை நிறைவு செய்து,. தந்தையைப் போலவே வழக்கறிஞரானார். என்றாலும் விடுதலை வேட்கை கொண்ட அவர் மனம் வழக்கறிஞர் தொழிலில் அதிக நாட்டம் கொள்ளவில்லை.
1895இல் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. வள்ளியம்மையைக் கைப்பிடித்தார். மணவாழ்க்கை ஆறே ஆண்டுகள்தான் நீடித்தது. மனைவி 1901இல் காலமாகிவிட்டாள்.
பின்னர் வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது.
, வ.உ.சி. தன் வாழ்வின் நேரம் முழுவதையும் நாட்டு விடுதலைப் பணிக்கென்றே அர்ப்பணித்தார்.
1905இல் வ.உ.சி. இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைதூக்கிய தருணம் அது. லாலா லஜபத்ராய், திலகர், அரவிந்தர் ஆகியோர் முழுவீச்சுடன் அதில் உழைத்துவந்தார்கள்.
பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றோர் சென்னை மகாகாணத்திலிருந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டுத் தொண்டாற்றினார்கள்.
வ.உ.சி. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமை தாங்கும் அளவு அந்தஸ்தைப் பெற்றார்.
வ.உ.சி.யின் மனம் கடலில் ஆங்கிலேயேரின் கப்பல்கள் தான் ஓடவேண்டுமா, இந்தியர்களின் கப்பல் ஓடக் கூடாதா எனச் சிந்தித்தது. 1906 நவம்பர் 12ஆம் நாள் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் நிறுவனத்தை நிறுவினார்.
வ.உ.சி.யின் கப்பல்கள் தூத்துக்குடி - கொழும்பு இடையே சேவைகளைத் தொடங்கின. இந்தியர்களாலும் கப்பல் விட முடியும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாமல் ஆங்கிலேயர்கள் திகைத்தனர். பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு வ.உ.சி.யின் கப்பல் கம்பெனி கடும் போட்டியாக உருவாகியது.
போட்டியை சமாளிக்க பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி கட்டணத்தைக் குறைக்க முடிவுசெய்தது. வ.உ.சி. தாமும் பிரிட்டிஷ் கம்பெனியை விடவும் கட்டணத்தைக் குறைத்தார்.
இதற்குமேல் என்ன செய்வது என யோசித்த பிரிட்டிஷ் நிறுவனம் இலவசமாகவே பயணிகளை ஏற்றிச் செல்ல முன்வந்தது. தங்கள் கப்பல்களில் இலவசப் பயணம் செய்யும் பயணிகளுக்குக் குடைகளை அன்பளிப்பாகத் தரத் தொடங்கியது.
இத்தகைய கடும் போட்டியை வ.உ.சி.யால் சமாளிக்க இயலவில்லை. சுதேசிக் கப்பல் கம்பெனி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அவர் ஆங்கிலேய ஆட்சியின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்யலானார். தம் செயல்பாடுகளுக்கு திருநெல்வேலியில் உள்ள `கோரல் மில்ஸ்` தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். எண்ணற்ற தொழிலாளர்களின் ஆதரவை அவர் பெற்றது ஆங்கிலேயர்களின் கண்ணை உறுத்தியது.
இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று முடிவுசெய்து 1908 மார்ச் 12 அன்று அவரைச் சிறைசெய்ய அரசாங்கம் உத்தரவு பிறப்பத்தது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோயம்புத்தூர்ச் சிறையில் அவரை அடைத்தது.
தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் கருத்துகளால் கவரப்பட்ட வ.உ.சி., சிறையில் அவரது நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். `அகமே புறம், மெய்யறிவு, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம்` என்ற தலைப்புகளில் அமைந்த அந்தச் சின்னஞ்சிறு நூல்கள் ஒவ்வொன்றும் பயில்பவரின் வாழ்வை மேம்படுத்தும் பொக்கிஷங்கள்.
வ.உ.சி கைது செய்யப்பட்டதை அறிந்து நாடெங்கும் வன்முறை வெடித்தது. காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் உருவாயிற்று. மோதலில் நான்குபேர் மரணமடைந்தனர்.
வ.உ.சி.யை விடுவிக்க வேண்டும் என்ற குரல் இந்திய நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்கவில்லை.
எனினும் 1912 டிசம்பர் 12 அன்று அவரை விடுதலை செய்தாக வேண்டிய கட்டாய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
காரணம் வ.உ.சி.யின் மிக மோசமான உடல்நிலை. சிறைப்பட்ட காலத்தில் செக்கிழுத்தல் உள்ளிட்டு அவர் செய்த கடும் உடல் உழைப்பால் அவர் உடல்நலம் சீர்கெட்டது.
அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அது பெரும் சங்கடத்தைத் தோற்றுவிக்கும் என்றெண்ணிய அதிகாரிகள் அவரை விடுதலை செய்தார்கள்.
தமது ஆதரவாளர்கள் எண்ணற்றோர் சிறைவாயிலில் தன்னை வரவேற்கக் காத்திருப்பார்கள் என்ற எண்ணத்துடன் சிறையை விட்டு வெளியே வந்த வ.உ.சிக்குக் கடும் அதிர்ச்சி. வெளியே பெரிதாகக் கூட்டமெதுவும் இல்லை.
பிரிட்டிஷ் அரசின் அடக்கு முறையைக் கண்டு மக்கள் அஞ்சினார்களா, சில ஆண்டுகளுக்குள்ளேயே மக்கள் அவரை மறந்துவிட்டார்களா? புரியாமல் குழம்பியது அவர் உள்ளம்.
பாரிஸ்டர் பட்டம் ஏற்கெனவே அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால் அவரால் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள இயலவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911இல் ஒழிக்கப்பட்டது.
மாபெரும் செல்வந்தராக, கப்பல் நிறுவன உரிமையாளராக வாழ்ந்த அவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் காலத்தின் விசித்திரம். அவர் மனைவியோடும் இரு குழந்தைகளோடும் சென்னையில் குடியேறினார்.
`வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - செந்தமிழ்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து!`
என உள்ளத்தை உருக்கும் வகையில் வெண்பா எழுதினார் அவர்.
பிழைப்புக்காக அரிசி, நெய் வியாபாரம் செய்தார். பின் கோயமுத்தூர் தொழிலாளர் பாங்கு ஸ்டோர்ஸ் பணி அவருக்குக் கிட்டியது. கோவை சென்றார்.
மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்றும் உரிமையை நீதிபதி இ.எச். வாலசின் உதவியால் 1924இல் பெற்றார். அதற்கு நன்றி தெரிவிப்பதுபோல் தம் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் எனப் பெயர் சூட்டினார்.
(இந்த வாலேஸ்வரன் தம் முதிய வயதில் அண்மையில் காலமானார் என்ற செய்தி சிறிது காலத்திற்குமுன் நாளிதழ்களில் வந்தது.)
மறுபடியும் வழக்கறிஞராகி கோவில்பட்டியில் குடியேறினார் வ.உ.சி. 1932இல் தூத்துக்குடி சென்றார். கடைசி நாட்களிலும் தமக்குப் பிடித்த எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார்.
1936 நவம்பர் 18 அன்று அவருடைய பெருமிதமான வாழ்வு அவரது அறுபத்து நான்காம் வயதில் நிறைவுற்றது. சுதந்திரக் காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் நம் தாயின் மணிக்கொடி, அவர் புகழைச் சொல்லியேதான் படபடக்கிறது.
(நன்றி: ஓம் சக்தி மாத இதழ்)
நன்றி: திரு திருப்பூர் கிருஷ்ணன், முகநூல் மற்றும் ஓம் சக்தி மாத இதழ்
🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக