13 பிப்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-22 - "புலம் பெயர்தல் "

எனக்குப் பிடித்த கவிதை-21

புலம் பெயர்தல்

கையில் பெட்டியுடனும்
அம்மாவின் கண்ணீருடனும்
அப்பாவின் அறிவுரையுடனும்
கிராமத்தை விட்டு வெளியேறி
ஏழெட்டு வருடமாகிறது.

கல்லூரிப் படிப்பிற்காக
நகரம் வந்தது,
நண்பர்க்ளோடு 'பேச்சிலர்' வாழ்க்கையும்
படிப்பிற்கேற்ற வேலையும்
நகரத்தில் கிடைத்துவிட
விழித்துக் கொண்ட பின்னும்
ஞாபகத்திலிருக்கும்
கனவாகவே ஆகிப்போனது
கிராமம்.

அம்மாவின் அன்போ
அப்பாவின் வசவோ
கல்லூரியில் கடிதத்திலும்
பிறகு தொலைபேசியிலும்
இப்பொழுது
ஆளுக்கொன்றாய்
வாங்கிக் கொடுத்திருக்கும்
செல்போனில் மட்டும்தான்.

விளையாடித் திரிந்த
வேலிக்காடுகளையும்,
அணில்வேட்டையாடிக் கிடந்த
மஞ்சனத்தி மரங்களையும்,
அலைந்து திரிந்த
ஆற்றங்கரையையும்
எட்ட நின்று வேடிக்கைபார்ப்பதுகூட
விடுமுறைகளில் மட்டும்தான்.

நகரத்தில் பார்க்கிற
கடற்கரை பௌர்ணமியையும்
கட்டிடங்களுக்குப்
பின்னால் மறைகிற
சூரியனையும்
அப்பார்ட்மென்ட் மாடியில் பெய்கிற
மழையையும்
கிராமத்து நிமிஷங்களோடு
ஒப்பிட்டுக்கொண்டே கிடக்கிறது மனசு.

ஊருக்குப் போக முடியாத
பண்டிகை நாட்களில்
உள்ளூர் நண்பனின்
வீட்டுக்குச் செல்கையில்
குடும்பத்தோடிருக்கும்
அவனைப் பார்க்கும் போது
ஏக்கம் மெதுவாய்
எட்டிப் பார்க்கும்.

தலைகீழாய் இறங்கி
தரைதொட்டு வேரூன்றி
தாய்மரத் தின் கூடவேயிருந்து
தாங்கும் விழுதாய்
வாழமுடியாமல்
பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து
துண்டாய் வெட்டியெடுத்து
தொலைதூரத்தில்
பதியனிட்டுக் கொண்டிருப்பதை
சுய பரிதாபம் சுட்டிக்காட்டும்.

பார்த்துக்கொண்ட வேலையும்
பழகிப்போன பிழைப்பும்
நகரத்தோடு பிணைத்துப்போட
இழந்துவிட்ட சொர்க்கமாகவே
இருக்கிறது கிராமம்.

இனியென்ன...
எல்லோரையும் போல
நகரத்தின் மையத்திலோ ஓரத்திலோ
இல்லை கொஞ்சம் தூரத்திலோ
ஒருவீ டு வாங்கி
ஆலமரத்தை
வேரோடு பெயர்த்து
வேறிடத்தில் நடுவது போல
அப்பா அம்மாவையும்
கிராமத்திலிருந்து நகரத்திற்கு
அழைத்து வரவேண்டும்.

மரமென்றால் பட்டுப்போகும்
மனிதர்கள்தானே...
பழகிப் போகும்.
என்ன,
எனக்கு வாய்த்த
வேப்பமரத்தடிப் பள்ளியும்
வெள்ளம் பெருகியோடும் ஆற்றங்கரையும்
களத்து மேட்டுக்
காவல் ராததிரிகளும்
அங்கு கேட்டுக்கிடந்த
காதல் கற்பனை, பேய்க் கதைகளும்
ஊருணிக்கரை புளியம்பழங்களும்
என் மகனுக்கோ மகளுக்கோ
என்னவென்றே தெரியாமல்போகும்.

- பொ.வெண்மணிச்செல்வன்

நன்றி : செம்மலர், பிப்ரவரி 2008

கருத்துகள் இல்லை: