26 செப்., 2011

சூரியின் டைரி-52: சித்தப்பா, சித்தப்பா!

நேற்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஆறு மணி அளவில் வீட்டை விட்டுக் கிளம்பி கோட்டையூர் இரயில் நிலையம் அடைந்தேன். திருச்சி செல்லும் இரயில் ஆறு மணி நாற்பத்தைந்து நிமிடத்திற்கு வந்தது.  அது எனக்கு மிகவும் பிடித்த இரயில். கூட்டமிருக்காது.  சௌகர்யமாக, சிறிதும் டென்ஷன் இல்லாமல், மனதையும், உடலையும் தளர்த்தி ஜன்னல் வழியே காலைப் பொழுதைக் கண்டு மகிழ்வது; ஊன்றிப் படிக்கவேண்டும் என்று வெகு நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்த புத்தகத்தைப் படிப்பது; எனது கேனன் கேமராவினால் இயற்கையை அள்ளுவது; சுடோக்குப் போடுவது; கொறிப்பது, பழைய நினைவுகளை அசைபோடுவது  என்று மனம் போனபடி ஒரு இரண்டு மணி நேரப் பொழுதைச் சுகமாகக் கழிப்பது -  இத்தனையும் வெறும் பதினான்கு ரூபாய்க்கு.(பேருந்துக் கட்டணம்: ரூபாய் இருபத்தொன்பது - முப்பத்துமூன்று!).

நேற்று நான் திருச்சி சென்றது என் பிரியமான சித்தப்பாவின் கருமாதியில் கலந்துகொள்ள. அவரது இறுதிக் காலத்தில் அவரைக் காணமுடியாமல் போனதும், அவரது உடலைக் கூட பார்க்க முடியாமல் போனதும் ஒரு சோகம்தான். கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த எதற்கும் கலங்காத, அசராத அவரது வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். (இறுதிவரை பெரிய நோய்நொடி எதுவும் இருந்திருக்கவில்லை.)

என்னைப் பொறுத்த வரையில், சிறு வயதிலிருந்தே என் மேல் பேரன்பு கொண்டிருந்தார். பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் திருச்சி சென்று அவரோடிருப்பது ஒரு சுகமான அனுபவம். ஊரெல்லாம் சுற்றுவோம்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு விடுதியில் விதம் விதமான தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார்.  சினிமாவிற்கு கூட்டிச் செல்வார். இனிதாக உரையாடுவார்.  ஒளிவு மறைவு இல்லாமல் என்னிடம் பல செய்திகளைச் சொல்வார்.  அந்த வயதில் இவற்றைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கமுடியும்? 


அவருக்கு ஒருவயது ஆனபோது அவரது தந்தையார் மறைந்தார்.  இரண்டு வயது ஆனபோது அன்னையார் காலமானார்.  கிட்டத்தட்ட ஒரு அனாதைபோல அவரும், எனது தந்தையாரும் (அவரைவிட ஐந்தாறு வயது பெரியவர்) குழந்தையே இல்லாத, பணக்காரப் பெரியம்மா வீட்டில் வளர்ந்து ஆளாகினர்.  கணவனை இழந்த அந்தப்பாட்டிதான் இவர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியது.  சித்தப்பா மேல் பாட்டிக்கு அளவு கடந்த பிரியம்.  அவர் பெறாத பிள்ளை சித்தப்பா.  சித்தப்பாவின் திருமணத்திற்குப் பல ஆண்டுகள் முன்னரே பாட்டி காலமானார்.  விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இவர்கள் அனைவரும் தங்களுக்குத்தான் வரப்போகிறது என்று எண்ணியிருந்த அத்தனை சொத்துக்களும், பாட்டியின் கணவர் வழி உறவினர்களுக்கு சட்டப்படி போய்ச்சேர்ந்தது.  

இருப்பினும் இரயில்வேயில் வேலை கிடைத்து, பணக்காரக் குடும்பத்தில், வசதி வாய்ப்புடன் திருமணம் ஆனது.  நன்றாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இனிதாக இருந்திருக்க வேண்டிய தன் வாழ்க்கையைச் சிக்கலாக்கி, பிரச்சினை மேல் பிரச்சினைகள் உருவாக, தேவையில்லாத துன்பங்களை எல்லாம் எதிர்கொண்டார்.  எனது சித்தியின் மனம் நோகவைத்தார். அவருண்டு அவரது வேலையுண்டு என்று இருந்திருந்தாலே ஓரளவு வசதியாக வாழ்ந்திருக்கலாம்.  வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன், சைடு பிசினஸ் செய்கிறேன் என்று கண்டவர்களையும் நம்பி பெரிதும் நஷ்டப் பட்டார். தவறான ஆட்களுக்கெல்லாம் ஜாமீன் கையெழுத்துப் போட்டார்; அதனாலும் நிறையத் துன்பம். பின்னர் அவரே வட்டிக்கு வாங்கும் நிலை வந்தது, அதுவும் ஈட்டிக்காரர்களிடம்.  அவர்களிடம் சிக்கிக் கொண்டு அவர் பட்டபாட்டை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.  வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வார்கள்.  அக்கம் பக்கம் எல்லாம் மூக்கு வியர்க்கும்.  சித்தி ஒரு சிறிய ஜாமீன் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.  அவர்களது நிலபுலம் எல்லாவற்றையும் அழித்து, அவர்களது நகைகளை அழித்து, அதன் பிறகு இந்த ஈட்டிக்காரர்களிடம் சிக்கிக் கொண்டது.

ஒரு முறை நான் சென்றிருந்தபோது, அவரிடம் கையில் பணம் இல்லை.  ஒரு எட்டிக்காரரிடம் கூட்டிப் போனார்.  அவரிடம்  நூறு ரூபாய் கடன் வாங்கினார்.  என் பொருட்டு என்றுதான் சொல்லவேண்டும். பத்து ரூபாய் மாத வட்டியைக் கழித்துக் கொண்டு, தொண்ணூறு ரூபாயைக் கொடுத்தான் அந்த ஈட்டிக்காரன்.  பிராமிசரி நோட்டில் மொட்டைக் கையெழுத்து வாங்கிக்கொண்டான்.  சுமார் இரண்டு வருடம் மாதாமாதம் பத்து ரூபாய் வீதம் அவனே அலுவலகம் தேடி வந்து வட்டியை வசூலித்துச் சென்றான் (இருநூற்று நாற்பது ரூபாய்!). சித்தப்பா கடனையடைக்க எந்த முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.  பின்னர் வட்டியையும் கொடுக்கவில்லை.  இறுதியில் நீதிமன்றத்தில் இக்கடன் பொருட்டு, அவரது சம்பளம்  'அட்டாச்'  செய்யப்பட்டு, அந்த வழியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம்  வரை செலவு.  தொண்ணூறு ரூபாய்க் கடன்! இது ஒரு சிறிய உதாரணம்.

இறுதியில் எல்லாவற்றிலிருந்தும் சிரமப்பட்டு தலையைக் கழற்றிக்கொண்டார். ஆனால் பின்னர் இது அவரது குழந்தைகளின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. சித்தியும் புற்றுநோய் கண்டு காலமானார். அங்கிருந்த இதுபோன்ற கொடுமையான சூழலைக் காண விரும்பாது, அங்கே போவதை படிப்படியாக நிறுத்திக் கொண்டேன்.  அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன்.  அவர்களுக்கு அன்பும், ஆதரவும் தேவைப்பட்ட தருணத்தில், சுயநலமாக, நான் ஒதுங்கிவிட்டேன்.  குற்ற உணர்வு கொல்கிறது.  எனது முதிய நண்பர் ஒருவர் கூறுவார்: "I  have  no  regrets  in  life".  ஆனால் எனது வாழ்க்கையோ FULL OF REGRETS; OF THINGS DONE AND NOT  DONE.


வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களால், எச்சரிக்கை உணர்வுடன்  சில கடமைகளைச் சிறப்பாகச் செய்ய முடிந்தது.  அப்போதெல்லாம் பெருமையுடன் என்னைப் பாராட்டுவார்.  எவ்வளவு பொறுப்புணர்வுடன் வாழ்கிறான் என்று என்னைப் பற்றி பலரிடமும் சொல்லிப் பெருமைபடுவார். 


நேற்று அவரது பேரப்பிள்ளைகளைப் பார்த்தபோது எனது மன வருத்தம் சிறிது குறைந்தது.   ஒரு பேரன் பொறியியல் பட்டம் பெற்று, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து, தற்போது அமெரிக்காவில்.  இரண்டாவது பேரன் பொறியியல் பட்டப் படிப்பை முடிக்கும் தருவாயில்.  இரண்டு பேத்திகள் நன்றாகப் படித்து, நல்ல வேலையில்.  இன்னொரு பேத்தி பட்டப்படிப்பில்.  அவரது ஒரே மகனும் இரயில்வேயில் ஓரளவு நல்ல நிலையில்.  சித்தப்பாவின் ஆன்மா ஓரளவு சாந்தி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  கடைசிக் காலத்தில் என்னைப் பார்க்க வேண்டும் என்று என் பெயரை அடிக்கடிக் கூறிக்கொண்டிருந்தார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது என் குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியது.  என்ன செய்ய?  எல்லாம் முடிந்துவிட்டது.

இதமான அவரது அன்பு என்றும் மறக்க இயலாதது.  அவரது வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டவை: 

செய்யக் கூடாதவை: 

1. வட்டிக்குக் கடன் வாங்குவது, அதிலும் கந்து வட்டிக்கு.
2. யாருக்கும் எந்த நிலையிலும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.
3. மனைவியின் நகைகளை எக்காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது.
4. கோளாறான ஆட்களை விட்டு விலகியிருப்பது.
5. சீட்டாட்டம் போன்ற எந்தச் சூதாட்டத்திலும் ஈடுபடாமல் இருப்பது.


என் அன்பான சித்தப்பா என் கல் மனதை மன்னித்திருப்பார் என்று நம்புகிறேன்.          

கருத்துகள் இல்லை: