18 செப்., 2020

குட்டிக்கதை : பார்வைகளில்தான் எவ்வளவு வித்தியாசம் !

தினம் ஒரு கதை 12/09/2020

நம் பார்வைகளில் தான் எத்தனை வித்தியாசம்..!!

அவர் ஒரு எழுத்தாளர்.. ஒரு நிறுவனத்தில்  பெரிய பதவியிலும் வேலை பார்ப்பவர்..

வருடக்கடைசியில், அவர் தன்னுடைய டைரியில் இப்படி எழுதினார்....

"... இந்த ஆண்டு என்னுடைய  பித்தப்பை  அகற்றப்பட்டது.." மிகவும் வலி நிறைந்த ஆண்டு"...

.... 90 வயது நிரம்பிய என்னுடைய பாசத்திற்குரிய அப்பாவை இழந்தேன்.." மிகவும் வலி நிறைந்த ஆண்டு"

... மருத்துவ படிப்புக்கு செல்ல வேண்டிய எனது ஒரே மகன் பெரிய விபத்துக்குள்ளானதில் அவன் ஓட்டிய கார் சுக்கு நூறானது.. சிறு காயங்களுடன் தப்பித்தாலும் அவனால் இந்த ஆண்டு மருத்துவ படிப்பை தொடர முடியவில்லை... "மிகவும் வலி நிறைந்த ஆண்டு"

... எனக்கு அறுபது வயதாயிற்றாம். என் நிறுவனத்தில் ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டார்கள். இனி நான் எப்படி பொழுதை கழிக்கப் போகிறேன்.. "மிகவும் வலி நிறைந்த ஆண்டு"...

இப்படி எழுதி கொண்டிருக்கும் போதே, அறைக்குள் தேநீர் எடுத்து வந்த அவரது மனைவி, கணவர் எழுதி கொண்டிருந்ததை பார்த்தவர் ஒரு புன்னகையுடன் தேநீர் கோப்பையை அவர் அருகில் வைத்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தார்....

சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர் அறைக்குள் நுழைந்த அவர் மனைவி கையில் ஒரு பேப்பர்.... அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது... அதை அவர் கணவர் கையில் கொடுத்து வாஞ்சையுடன் அவர் தலையை தடவினார்....

அதில் என்ன எழுதப்பட்டிருந்தது....

"....... இந்த ஆண்டு முழுவதும் பிரச்சனை கொடுத்து கொண்டிருந்த பித்தப்பை அகற்றியதால் நீங்கள் வலியால் பட்ட அவஸ்தை குறைந்து நிம்மதி அடைந்தீர்கள்..." மிக சிறப்பான ஆண்டு"

..... இந்த ஆண்டு நம் பையன் மருத்துவ படிப்பு படிக்காவிட்டால் என்ன.. நடந்த மோசமான விபத்தில் அவன் உயிர் பிழைத்தானே.... என்னே, இறைவனின் அருட் கொடை.. "மிக சிறப்பான ஆண்டு"

...... 90 வயதில் அதிக சிரமப்படாமல், யாருக்கும் சுமையாக இல்லாமல், அமைதியாக உங்கள் தந்தையின் உயிர் பிரிந்ததே...... "மிக சிறப்பான ஆண்டு"

....... உங்களுக்கு ஓய்வு கிடைத்து விட்டதால், இனி  என்னுடனும் நம் பையனோடும் அதிக நேரம் செலவிட முடியும். உங்கள் திறமைகளை மேலும் வளர்த்து கொண்டு நிறைய படிக்கவும் எழுதவும் முடியும்.. உங்களுக்கு ஆர்வம் இருக்கும் ஆன்மிக, சமுதாய பணிகளில் ஈடுபட முடியும்..." மிக சிறந்த ஆண்டு"..

"இறைவனின் கருனையே கருணை. நாம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்...."

தன் மனைவி எழுதி கொண்டு வந்ததை படித்த கணவனின் கண்களில் பொல பொலவென கண்ணீர்....

நான் ஒரு பெரிய எழுத்தாளராக இருந்தும்.... எனக்கு என்ன ஆயிற்று... இப்படியெல்லாம் நான் ஏன் யோசிக்கவில்லை......

பார்வைகளில்தான் எவ்வளவு வித்தியாசம்...

கருத்துகள் இல்லை: