5 செப்., 2008

பாரதி கவிதைகள்-7: "ஆத்ம ஜெயம்"

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? - அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே.

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாலும் திறமை பெறாது இங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?

கருத்துகள் இல்லை: