26 ஜூன், 2018

இன்று ஒரு தகவல்-66: “மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த முடியாது” - நீதிமன்றம்

*“மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த முடியாது” - நீதிமன்றம்*

*மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த முடியாது, ஏடிஎம் ரகசிய எண்ணை கணவர் உட்பட யாரிடமும் பகிரக்கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.*

*பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர் வந்தனா மற்றும் ராஜேஷ் குமார். கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தனது ஏடிஎம் கார்டை கணவரிடம் கொடுத்த வந்தனா, ரூ.25,000 பணம் எடுத்துவரச் சொல்லியுள்ளார். அதை எடுத்துக்கொண்டு அருகாமையில் இருந்து எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்ற ராஜேஷ், கார்டை செலுத்தி பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.*

*அப்போது பணம் ரூ.25,500 எடுக்கப்பட்டதாக ரசீது வெளிவந்துள்ளது. ஆனால் பணம் வரவில்லை.*

*இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், எஸ்.பி.ஐ உதவி மையத்தின் தொடர்பு எண்ணை அழைத்து விவரத்தை கூறியுள்ளார். உதவி மைய ஊழியர்களும் பணத்தை திரும்பி வழங்க வழி செய்கிறோம் எனக்கூறியுள்ளனர்.*

*ஆனால் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை , அதானல் அடுத்த நாள் வங்கி அலுலகத்திற்கு சென்றபோது, பணத்தை தர முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏன்? என ராஜேஷ் கேட்க, உங்கள் மனைவியின் ஏடிஎம் கார்டை நீங்கள் பயன்படுத்தியது தவறு, உங்கள் மனைவி ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை உங்களிடம் பகிர்ந்திருப்பது எங்கள் விதிமுறைப்படி தவறாகும் எனக்கூறியுள்ளது.*

*இதையடுத்து கடந்த 2014 அக்டோபர் மாதம், நியாயம் கேட்டு பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தை வந்தனா மற்றும் ராஜேஷ் தம்பதியினர் நாடியுள்ளனர்.*

*ராஜேஷ், வந்தனா தரப்பில் ஏடிஎம் அறையில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக சமர்பித்துள்ளனர். அந்தக் காட்சிகளில் பணம் எடுக்கப்பட்டதாக ரசீது மட்டும் வெளிவரும் காட்சிகளும், பணம் வெளிவராத காட்சிகளும் இருந்துள்ளன.*

*வங்கி தரப்பில் தங்கள் விதிமுறைப்படி ஏடிஎம் ரகசிய எண்ணை பகிர்வது தவறு என்றும், அதனால் பணத்தை திரும்பி வழங்க இயலாது என்றும் வாதம் செய்யப்பட்டுள்ளது.*

*இந்த வழக்கு கடந்த மூன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை கணவர், நெருங்கிய உறவினர்கள் உட்பட யாரிடமும் மனைவி பகிரக்கூடாது எனக் கூறியது. அத்துடன் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை யாரும், யாருடனும் பகிரக்கூடாது என அறிவுறுத்தியது.*

*வந்தனா தனது கணவரிடம் கசோலையோ அல்லது வங்கியில் பணம் எடுப்பதற்கான அங்கீகார கடிதத்தையோ வழங்கியிருக்கலாம் என்றும், ரகசிய எண்ணை வழங்கியது தவறு என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.*

*கணவன் மனைவிக்கு மட்டும் இந்த விதி பொருந்தும் என எண்ண வேண்டாம். வங்கி விதிகளின் படி, ஏடிஎம் கார்டு என்பது கணக்கு வைத்திருப்பவருக்கு வங்கி கொடுக்கு கார்டு பாஸ் புக். இதனை சம்பந்தப்பட்டவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது, கடவு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது மற்றும் மாற்றத்தக்கதல்ல என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.*

*அடுத்தவர்களிடம் ஏடிஎம் கார்டுகளை கொடுத்து பணம் எடுத்து வரச் சொல்லும் வரை சரி. பணம் வந்து விட்டால் சிக்கல் இல்லை, வரவில்லை என்றால் சிக்கல். அதனால் வங்கி விதிகளை முறையாக படிப்பதும் அதன் அடிப்படையில் செயல்படுவதும் அவசியம்*

*நன்றி : புதியதலைமுறை*

கருத்துகள் இல்லை: