31 ஜன., 2020

மனதைக் கவர்ந்தது : கிராமசபையில் மாணவியின் கேள்வியால் கிடைத்த பேருந்து வசதி

`கிராம சபையில் மாணவியின் கேள்வியால் கிடைத்த பேருந்து வசதி!' - ஆச்சர்யம் அளித்த மதுரை எம்.பி!

கிராமசபை கூட்டம் என்பது சடங்காக நடத்தப்பட்டு வரும் நிலையில் சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராம சபையில் இயற்றப்படும் தீர்மானம் என்பது யாராலும் மாற்ற முடியாத அளவுக்குச் சட்ட அங்கீகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் மதுரை அருகே மீனாட்சிபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சஹானா என்ற 5-ம் வகுப்பு மாணவி,
``எங்கள் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டும் உள்ளது. உயர் நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் ஊரிலிருந்து 7 கிமீட்டர் தூரத்திலுள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. அப்படி செல்லும்போது நேரத்துக்கு பேருந்து வசதி இல்லை. எனவே, பேருந்து வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும்' என்று பேசினார். பெரியவர்களே கிராம சபையில் கோரிக்கை வைக்கத் தயங்கும் நிலையில் 5-ம் வகுப்பு மாணவி பேசியது சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்றது.

மாணவி பேசியதை ஊடகங்களில் பார்த்த திரு. சு.வெங்கடேசன் எம்.பி மிகவும் மகிழ்ச்சியடைந்து, இதுபோல, மாணவிகள் சிறுவர் சிறுமியர்களும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இதுகுறித்து, உடனே நான் அதிகாரிகளிடம் பேசினேன். தற்போது பேருந்து விடப்போவதாக உறுதி அளித்துள்ளனர். இதுபோல அனைவரும் கிராம சபையில பேச வேண்டும். மாணவி சஹானாவை வாழ்த்துகிறேன்" என்றார்.

சஹானா கூறியது:  ``நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்னையில்லை. எங்க அக்கா உட்பட நிறைய அக்காக்கள் மாயாண்டிப்பட்டி உயர்நிலைப் பள்ளியில படிக்கப் போறாங்க. ஊருக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவை டவுன் பஸ் வருது. ஆனா, அது ஸ்கூலுக்குப் போற நேரத்துக்கு வராது. அதனால எங்க ஊர் அக்காக்களெல்லாம் 7 கிலோமீட்டர் நடந்து போவாங்க. அதுபோல வரும்போதும் நடந்து வருவாங்க. வர்ற வழியில பிராந்திக்கடை வேற இருக்குது. அதனால ஸ்கூலுக்கு போனவங்க திரும்பி வர்ற வரைக்கும் என் அம்மா அப்பா பயந்துகிட்டே இருப்பாங்க. ஊருல உள்ள எல்லோரும் புலம்புவாங்க. அப்பத்தான் எங்க ஊருல கிராம சபைக் கூட்டத்துல பேசலாம்னு நினைச்சேன். யாரும் எனக்கு சொல்லித்தரல. நானாத்தான் பேசினேன். இப்ப எல்லோரும் பாராட்டுறாங்க".
மீனாட்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிக்கு பள்ளி நேரத்தில் பேருந்து விடுவதாக அதிகாரிகள் உறுதியளித்த தகவலைத் தெரிவிப்பதற்காக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீனாட்சிபுரத்துக்கு வருகை தந்தார். அங்கு மாணவி சஹானாவை சந்தித்தவர், சிறப்பாகப் பேசிய அவருக்கு பரிசு ஒன்றையும் அளித்தார்.

எம்.பி-யின் பாராட்டு மற்றும் பரிசைப் பெற்றபோது மாணவி சஹானா ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனால் அங்குள்ளவர்கள் நெகிழ்ந்தனர்.

நன்றி : திரு.செ.சல்மான் பாரிஸ் மற்றும் விகடம்.காம்.

மாணவி சஹானாவிற்கும்,  எம். பி. திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 

கருத்துகள் இல்லை: