29 செப்., 2020

இன்று சில தகவல்கள் : அதலக்காய்

#அதலைக்காய் என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர்களுக்கும், ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் 'அதலைக்காய்'. இது பாகற்காயின் குடும்பத்தைச் சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.  பொதுவாக இக்காய்கள் கரிசல் காட்டுப் பகுதிகளில் அதிகமாக வளரக்கூடியவை. அதலைக்காயை விவசாயம் செய்ய தேவையில்லை. சாதாரணமாக வயல் கரைகளிலும், தரிசுகளிலும் முளைக்கக் கூடியது. இதனை விவசாயம் செய்யக் கூடிய விவசாயிகளும் விருதுநகர் பக்கம் இருக்கின்றனர். சர்க்கரை நோயைப் போல மஞ்சள் காமாலை நோய்க்கும் அதலைக்காய்கள் சிறந்தது. 

இந்த அதலைக்காய்க்கு விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனி மவுசு உண்டு. இதுதவிர, மருத்துவ குணத்திற்காக வெளியூர்களுக்கு வாங்கிச் செல்வோரும் உண்டு. இங்கு விளையும் அதலைக்காய்கள் மதுரை, தேனி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனை வாங்கிச் சென்று சமைக்க ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற காய்கறிகளைப்போல இதை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது. நீண்ட நாட்கள் வைத்திருந்தால் தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால் காயின் தன்மையும், சுவையும் மாறிவிடும். காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று வித்தியாசமானது. அதலைக்காய் கசப்பு தன்மை கொண்டதாக இருந்தாலும் உண்பதுக்கு ஏற்ற சுவை இருக்கும். 

இக்காய்கள் தமிழ்நாடு தவிர, கர்நாடகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் கொஞ்சம் காணப்படுகிறது. இக்கொடிகள் பாகற்காய் போலவே படரும் தன்மை உடையது. பார்ப்பதற்கு மிளகாயைப் போல தோற்றம் கொண்டிருக்கும். ஆனால் இவற்றுக்குப் பந்தல் தேவையில்லை. தரையிலேயே வளரும் தன்மை உடையது. சில நேரங்களில் வயல் வரப்புகளில் இருக்கும் செடிகளிலோ அல்லது கொம்புகளிலோ பற்றி வளரும் தன்மை உடையது. இக்கொடி பல ஆண்டுகள் வாழும் தன்மை உடையது. ஒவ்வொரு ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்துவிடும். ஆனால், மண்ணுக்கு அடியில் இருக்கும் கிழங்கு உயிருடன்தான் இருக்கும். கிட்டத்தட்ட ஃபீனிக்ஸ் பறவை போலத்தான் இச்செடியும். வறண்டுவிட்டது போல தோற்றமளித்தாலும், மீண்டும் முளைத்துவிடும். அதன் இலைப் பகுதி இதய வடிவமாக இருக்கும். ஒரே கொடியில் ஆண் மலர்கள் தனியாகவும், பெண் மலர்கள் தனியாகவும் இருக்கும். இதன் மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். 

 ஒவ்வோர் ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர்த்தார் 28 மி.மீ. நீளமும், காய்கள் 20-25 மி.மீ. நீளமும்  உடையவை. காய்களின் கரும் பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய துளைகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில் வழுவழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன. அதலைக் கொடிகள் ஐப்பசியில் பூக்க ஆரம்பித்து மார்கழி மாதம் காய்த்து தை திருநாளில் அறுவடை செய்யப்படுகின்றன. 

தமிழகத்தின் தென் மாவட்ட கிராமங்களில் அதலைக்காய் காய்க்கும் நேரத்தில் அவற்றைப் பறித்து சமையல் செய்து கொள்கின்றனர். முறையாகப் பயிரிடப்படாமல் தாமாக வளரும் கொடி என்பதால், இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவுதான். இதன் பொரியல் சுவை மிகுந்தது. இதனைப் பெரும்பாலானோர் அதிகமாக வாங்குவது பொரியலுக்காகத்தான். 

இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இந்தக்காய் அதிகமாக மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. இந்தக் காய் மூலிகை செடி கொடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விதையை எடுத்து நாம் வைத்தாலும் இந்த செடி வலராதாம். ஏன்னென்றால் இந்த செடி மழைக்காலங்களில் தானாக வளரக் கூடிய ஒரு செடி.

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

மஞ்சள் காமாலை
மஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உடல் எரிச்சல்
உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் அதலக்காயை தினந்தோறும் தங்களது உணவில் சேர்த்து வந்தால், உடல் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

குடற்புழு
குடற்புழு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

நன்றி :

கருத்துகள் இல்லை: