7 டிச., 2020

குட்டிக்கதை

வாய்மை.... 

அதென்னங்க வாய்மை..!! வாய்மை என்பதன் முழு உண்மையான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு..? 

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்".

இத புரியுற மாதிரி ஒரு சின்ன அற்புதமான கதை ஒண்ணு இருக்கு படிச்சு பாருங்க... 

ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையே பேசுவார்.அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது..

சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான்.. ஓடி வந்த மனிதன்,ஐயா, "இந்த வழியே ஒரு பசுமாடு ஓடியதா" என்று கேட்டான்.

எப்போதும் உண்மையே பேசும் குரு, மாடு இந்த வழியே சென்றது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

மனிதனும் மாடு சென்ற வழியே ஓடினான்.

தொலைவில் மறைந்து கொண்டிருந்த மாட்டைக் கண்டதும் அந்த மனிதன் அதை வெட்டிவிட்டான். காரணம் அவன் ஒரு கசாப்புக்கடைக்காரன்.

வெட்டுண்டு கீழே விழந்த மாடு இறக்குமுன் கசாப்புக்கடைக்காரன் தப்பிச் சென்ற, தன்னை அவனிடமே காட்டிக் கொடுத்த சன்யாசியை சபித்தது.

பல வருடங்கள் சென்று சன்யாசி மரணமடைந்தான். ஊர் மக்கள் உண்மையே பேசியவர் இவர். இவர் ஆத்மா சொர்க்கத்தில் வாழும் என்று புகழ்ந்தனர்.

ஆனால், சன்யாசியின் ஆன்மாவை எடுத்துச் சென்றவர்கள் யமதூதுவர்கள், இது சன்யாசிக்குக் கூடமிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

யமன் முன் நீதி கோரி நின்ற சன்யாசி நான் என்ன பாபம் செய்தேன்? என்றார்.
நீர் ஒரு பொய் சொன்னீர். 
அதனால் பாபம் செய்து இங்கு வந்துள்ளீர். 

ஒரு பசுமாட்டைத் தேடி வந்தவனிடம் அது இருக்குமிடத்தை நீர் காட்டினீர் என்றான் எம தர்மன்.

நான் பார்த்த உண்மையைத்தானே
சொன்னேன். அது எப்படி பொய்யாகும் என்று வாதிட்டார் சன்யாசி.

பார்த்ததை எல்லாம் அப்படியே சொல்வது வாய்மை அல்லது உண்மையாகிவிடாது. பிறருக்குத் துன்பம் நேராமல் பேசப்படும் சொற்கள்தான் உண்மை அல்லது சத்யம் எனப்படும் என்றான் யமதர்மன்.

நீர் பேசிய வார்த்தையால் உயிருக்குத் தப்பிவந்த வாயில்லாத ஜந்து ஒன்று கொடுரமாக மரணமடைந்தது. அதன் சாபம் உம்மைப் பீடித்தது.

மாடு எங்கே என்று கேட்டவனிடம் நீ யார்? 

"எதற்காக மாட்டை விரட்டுகிறாய் என்று கேட்டிருந்தால் அது விவேகம்." 
"அதைத் தெரிந்து கொண்டு மாட்டுக்குத் தீமை வராமல் பதில் கூறியிருந்தால் அதுவே வாய்மை" என்றான் யமதர்மன்.

இப்ப புரியுதுங்களா... வாய்மைன்னா என்னன்னு....
 "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்". 

நன்றி....🙏

கருத்துகள் இல்லை: