27 ஏப்., 2021

குட்டிக்கதை

எச்சரிக்கை ...பயந்த சுபாவம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்க வேண்டாம்....

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம்...

தென்னந்தோப்புகளும் பாக்கு தோட்டங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்தபகுதி அது!

நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம்
வாழ்ந்துகொண்டு இருந்தது!
நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி,
அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை!
ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக 
தென்னந்தோப்புக்கு செல்கிறாள்!

அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறது!
அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது!

திரும்பவும் மீண்டும் ஒரு முறை அதே அழுகுரல் கேட்கிறது!
பயத்துடன் அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்!

ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்!
தென்னை மரத்தில் ஏதாவது குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்!
எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை!

ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்!
பயந்து போய் தன்னுடைய கணவனுக்கு சொல்கிறாள்! அவன் முதலில் ஏதாவது உன்னுடைய பிரம்மையாக இருக்கும் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறான்!

அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்கும்போது,
இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை அந்த குழந்தையின் அழுகுரல் கேட்கிறது!

அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான்!

கையில் பெரிய டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள் நுழைகிறான்!

அவனுடைய மனைவி வேண்டாம் என்று மறுக்கிறாள்!
ஆனாலும் அவன் தைரியமானவன் என்பதாலும் அதே கிராமத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்டவன் என்பதாலும் தைரியமாக தோப்புக்குள் செல்கிறான்!

அவளும் கணவனுக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயந்து
பின்னாலேயே போகிறாள்!

அவளுக்கு கேட்ட அதே அழு குரல் அதே தென்னை 
மரத்திலிருந்து கேட்கிறது!

அவன் கீழிருந்தபடி உயரமான அந்த தென்னை மரத்தில் டார்ச் அடித்து பார்க்கிறான்! அந்த மரத்தில் இருந்து ஏதோ ஒரு பறவை மட்டுமே பறந்து செல்கிறது!

அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த அந்த அழுகை குரல் இப்போது கேட்கவில்லை!

போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால் இருவரும் வீடு திரும்புகிறார்கள்!
அடுத்த நாள் அவளுடைய அண்ணனுக்கு இந்த தகவலை
சொல்கிறாள்!

மீண்டும் அழுகுரல் வந்தால் எனக்கு போன் செய்யுங்கள்
நான் ஆட்களோடு வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறான்!

அவள் அந்த அழுகுரலுக்கு பயந்து அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்!

அடுத்த நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகை குரல் கேட்கிறது!

அவளும் அண்ணனுக்கு போன் செய்கிறாள்! அவளுடைய அண்ணன் நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான்!

அங்கே இருக்கும் சில மரக் கட்டைகளில் துணியை
இறுக்கமாக சுற்றிக்கொண்டு அவற்றின் மீது 
மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு அந்த தென்னந்தோப்பிற்கு கிளம்புகிறார்கள்!

வீட்டில் இருக்கும்போது குறைவாக கேட்கின்ற அந்த
அழுகை சத்தம் அருகேசெல்லச் செல்ல அதிகமாக கேட்கிறது!

பின் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் முழுவதும் நின்றுவிடுகிறது!
அந்த குறிப்பிட்ட மரத்தின் அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டிமேலே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்!

எதுவுமே தெரியவில்லை! அழுகுரலும் நின்றுவிட்டது!
தீயை பார்த்தால் எந்தப் பேயாக இருந்தாலும் பயந்துவிடும் என்றுகூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!

அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அழுகுரல் சத்தமாக கேட்க ஆரம்பிக்கிறது!

எல்லோருமே பயந்துவிடுகிறார்கள்! அந்த இடத்தை விட்டு
உடனே ஓடிவந்து விடுகிறார்கள்!
அடுத்த நாள் ஒரு பெரிய சாமியாரை அழைத்துவந்து
அந்த தென்னை மரத்தை சுற்றி மஞ்சள் கயிறால் கட்டு கட்டி,
ஒரு தென்னங்கன்றுக்கு பாலாபிஷேகம் செய்து நிறைய சடங்குகள் எல்லாம் செய்து, பூஜைகள் எல்லாம்
செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம்அந்த அழுகுரல் கேட்காது என்று சொல்லி விட்டுப் போகிறார்!

அவர்களும் நிம்மதியாக தூங்குகிறார்கள்!
ஆனால் அடுத்த நாள் விடியற்காலையிலேயே அந்த 
அழுகுரல் கேட்க ஆரம்பிக்கிறது!

இந்த முறை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது!
இடைவெளி இல்லாமல் திரும்ப திரும்ப கேட்கிறது!
தோப்பின் பக்கம் யாரோ ஆள் நடமாட்டம் இருப்பது போல் அவர்களுக்கு தெரிய, பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக, கொஞ்சம் தைரியத்தை 
வரவழைத்துக் கொண்டு போகிறார்கள்,

அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம்
இருப்பது போல் தெரிகிறது!
தென்னை ஓலைகளும் மட்டையும் அசைகின்ற சத்தம் கேட்கிறது!

திடீரென்று மரத்திலிருந்து ஒரு உருவம் சரசரவென இறங்கி கீழே வருகிறது!

இவர்கள் நடுங்கிப்போய் பார்க்க ....

மரத்திலிருந்து இறங்கிய மரமேறி, ஒண்ணும் இல்லம்மா
நாலு நாள் முன்னாடி தேங்காய் பறிக்க ஏறும்போது போனை
மேலயே விட்டுட்டு வந்துட்டிருக்கேன், எங்கடா காணோம் காணோம்னு நாலு நாளா தேடிட்டு இருந்தேன்,

ஒவ்வொரு தோப்பா போயி ஊரெல்லாம் போன் பண்ணி 
போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்!

கடைசியில உங்க தோப்புலயே இருந்திருக்கு!
என்று அவன் சந்தோஷப்பட அதற்குள் மீண்டும் அந்த
அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க அதை அட்டென்டு செய்து
போனு கிடைச்சிடுச்சிம்மா, கடைசியில நம்ம துர்கா அக்கா 
தோட்டத்துல தான் இருந்திருக்கு,

போனை பார்த்த பின்னாடி தான் எனக்கு உயிரே வந்திருக்கு,
என்று அவன் பேசியபடி நடந்து செல்ல ..

அட 😂 😀 😂
நல்லா ...............

கருத்துகள் இல்லை: