இக்கவிதைகள் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு/ அம்மாக்களுக்கு சமர்ப்பணம். அவர்கள் தன் மகளின் சுண்டுவிரல் பிடித்து பயணம் செய்வார்கள்.
கவிதை 1
"ஒவ்வொரு
இரவும்
தூங்கும் மகளின்
முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன்
தியானம் என்று
தனியாக எதுவும்
செய்வதில்லை"
கவிதை 2
"அவசரத்தில்
பொட்டு வைத்துப் போனாள்
மகள்
அதற்கு நேராக
என் புருவங்களை
நகர்த்திக் கொண்டேன்"
கவிதை 3
"குவளை நீர் முழுவதும்
சிந்திவிட்டாலும்
மகள்
கொண்டு வந்ததில்
என் தாகம் தீர்ந்தது"
கவிதை 4
"மகளின்
பாதங்களால்
நிறைகிறது
என் வீடு"
கவிதை 5
"நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கும் போது
தூங்கிவிட்டாள் மகள்
நான் எவ்வளவு சொல்லியும்
இரவு முழுவதும் காத்திருந்தன
நட்சத்திரங்கள்
எழுந்துவிடுவாள் என"
கவிதை 6
"வீட்டின் பூசை அறையில்
கை கூப்பி நிற்கிறாள்
இருக்கக்கூடும்
கடவுளுக்கும் சில வேண்டுதல்கள்"
_______________________
~ நூல்: மகளதிகாரம்
~ ஆசிரியர்: ஆண்டன் பெனி
~ பக்கங்கள்: 102
~ கிண்டில் வாசிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக