7 ஆக., 2025

இன்றைய புத்தகம்


1971 - இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்.

கற்கும்போது “இதுபோன்ற கவிதையை நாமும் இயற்றிவிடலாம் போலிருக்கிறதே” என்ற பிரமையைத் தோற்றுவித்து இயற்ற முயலும்போது பிடிக்குள் அடங்காமல் நழுவி நழுவிச் சென்றுவிடும் ஆற்றல் படைத்ததே சிறந்த கவிதையென்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

சமுதாய வீதி என்ற இந்த நாவலும் ஒரு விதத்தில் நமக்கு பிரமையைத் தோற்றுவிக்கிறது. இதில் வரும் பாத்திரங்களையெல்லாம் நேற்றோ, இன்றோ, சில நாட்களுக்கு முன்போ நாம் சந்தித்துப் பழகியிருப்பது போன்ற ஒரு பிரமை தோன்றுகிறது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் யாரையும் இனங் கண்டுகொள்ள முடியவில்லை. இதுதான் இந்நாவலின் தனிச்சிறப்பு.

இக்கதையின் நாயகர்களான முத்துக்குமரனும் மாதவியும் மட்டுமே சிறந்தவர்கள் என்று கூறிவிட முடியுமா? இதில் வில்லன் போல் தோன்றச் செய்த கோபால் எவ்வளவு சிறந்த குணச்சித்திரமாகப் படைக்கப் பெற்றிருக்கிறான். அவன் ஆடம்பர வாழ்விற்காக - பெருமைக்காக நல் உணர்வுகளை மட்டும் அடக்கிக்கொள்ளவில்லை. இளமையில் ஏற்பட்டுவிட்ட பண்பின் காரணமாகத் தீய உணர்ச்சிகளையும் - அவற்றை வெல்ல முடியாவிடினும் அடக்கிக்கொள்ளப் பழகியிருக்கிறான்.

இந்நாவலின் கதை முழுவதும் சென்னை நகரிலும், சென்னையைவிட ‘நாகரிக’த்தில் அதிக முன்னேற்றமடைந்துள்ள மலேசியா நாட்டிலும் நடக்கிறது. இந்த நாகரிக வாழ்வின் போலித்தனத்தையும் அவசர யுகத்தையும் கடுமையாகத் தாக்குகிற ஆசிரியர், இந்த ‘வெளிச்சம்போடும்’ வாழ்வுக்கிடையில் உண்மையான வாழ்க்கை வாழ வேண்டுமெனத் துடிக்கும் நெஞ்சங்களின் உணர்ச்சிகளையும் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

இன்றைய சமூகத்தின் போலித்தனத்தையும் நகர வாழ்வின் குற்றங் குறைகளையும் எடுத்துக்காட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பினும் எவ்வித விரசமுமின்றிப் படிப்பதற்குச் சுவையாக வளர்ந்து செல்கிறது இந்நாவல்.
- கண. முத்தையா ( 22- 9 - 1968 )


கருத்துகள் இல்லை: