17 ஆக., 2009

பாரதி கவிதைகள்-16: "நான்"

வானிற் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணிற் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலும் நான்

விண்ணிற் எரிகின்ற மீனெலாம் நான்
வெட்டவெளியின் விரிவெலாம் நான்
மண்ணிற் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்

கம்பன் இசைத்த கவியெலாம் நான்
காருகர் தீட்டும் முருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழினகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாதர் இசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையரும் துன்பப் புணர்ப்பெலாம் நான்

மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்ட நற்சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர் வானின் செல்லுவோன் நான்
ஆனா பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற்சோதி நான் .

கருத்துகள் இல்லை: