9 செப்., 2009

பாரதி கவிதைகள்-21: "ஞான பானு"

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்
மருவுபல் கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு.

கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்
அவலம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை அச்சம்
இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.
நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்.
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வார் மனிதர் என்றிசைக்கும் வேதம்

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய வண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்த முகத்தினோடும்
நண்ணிடும் ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்.

கருத்துகள் இல்லை: