26 அக்., 2009

இன்று படித்தவை-11: அக்டோபர் 25, 2009: "பி.எஸ்.ராமையா" (B.S.Ramaiah)

11. பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் எழுதிய "பி.எஸ்.ராமையா" - சாகித்ய அகாதெமியின் "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் வெளியிடப்பட்ட நூல். - 125 பக்கங்கள் - விலை 25/-

இந்நூல் இதை எழுதிய பேராசிரியர் பழனி இராகுலதாசன் அவர்களால் அன்புடன் எனக்கு வழங்கப்பட்டது. ("மதிப்பிற்குரிய சூரி அவர்களுக்கு, அன்புடன், மு.பழனி இராகுலதாசன் 19.10.06)

மூன்றாண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டபின் தற்போதுதான் இதைப் படிக்க முடிந்தது. படித்து முடித்தபின் இதன் ஆசிரியரைப் போலவே நானும் வியப்படைந்தேன்: " இந்த ராமையா இவ்வளவு பெரிய மனிதரா?! இவரை ஏன் தமிழுலகம் கண்டுகொள்ளவில்லை?" சில காரணங்களை என்னால் ஊகிக்க முடிந்தது. அவற்றில் ஒன்றிரண்டை வெளிப்படையாகச் சொன்னால் உதை விழும். அவை இருந்துவிட்டுப் போகட்டும்.

வத்தலகுண்டில் 1905 ஆம் ஆண்டில் மார்ச் 24 ஆம் நாளன்று பிறந்தார். இந்த ஊரில் பிறந்த மற்ற புகழ் பெற்றவர்கள்: சிருங்கேரி பரமாச்சாரியார் ஒருவர், "கமலாம்பாள் சரித்திரம்" எழுதிய பி.ஆர்.ராஜம் ஐயர், வடமொழி வல்லுநர் பி.வி.காமேஸ்வர ஐயர், விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா.

சிறுவயதிலேயே அவர் நெஞ்சில் தேசிய விதை ஊன்றிவிட்டது. அடுத்து எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம். அவரது வாழ்க்கையில் இந்த இரண்டுமே முக்கிய இடத்தைப் பிடித்தன. விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல முறை சிறை சென்றது, ஊர் ஊராக கதர்த்துணியை விற்றது, காங்கிரஸின் சேவாதள பயிற்சியில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் சேவாதளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது, பல முக்கிய தலைவர்களோடு தொடர்பு ஏற்பட்டது போன்றவை அவரது தேசிய எண்ணங்களின் வெளிப்பாடு. "காந்தி", "ஜெயக்கொடி", ஆனந்த விகடன், கல்கி, தினமணிக்கதிர், குமுதம், மணிக்கொடி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதியது, பிரேமஹாரம், தினை விதைத்தவன், நந்தாவிளக்கு, சந்தைப்பேட்டை போன்ற நாவல்களை எழுதியது, எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களது 'சேவா ஸ்டேஜ்' நாடகக் குழுவிற்காக 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', 'தேரோட்டி மகன்', 'போலீஸ்காரன் மகள்', 'பூவிலங்கு', 'மல்லியம் மங்களம்', 'பாஞ்சாலி சபதம்' போன்ற நாடகங்களை எழுதியது, 'பூலோக ரம்பை', 'மணிமேகலை', 'மதன காமராஜன்', 'பக்த நாரதர்', 'குபேர குசேலா', 'பரஞ்சோதி' போன்ற படங்களுக்கு திரைவசனம் எழுதியது அல்லது திரைவசனம் மற்றும் திரைக்கதையை ஒழுங்கு செய்தது போன்றவை அவரது எழுத்துத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. சி.சு.செல்லப்பா அவர்கள் ராமையா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை 304 என்று குறிப்பிடுகிறார். அவரது கதைகளில் வடிவத்தைவிட உள்ளடக்கத்திற்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக சி.சு.செல்லப்பா அவர்கள் கூறியுள்ளார். அவரது சிறுகதைகளில் 'மலரும் மணமும்', 'குஞ்சிதபாதம்', 'பதச்சோறு' ஆகியவை மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகிறது.

அவருடைய படைப்புகளில் காந்தீய சிந்தனைகள் இழையோடி இருப்பதைப் பார்க்கலாம்.

அவருடைய மிகச் சிறந்த இலக்கிய சேவை 'மணிக்கொடி' இதழை சிறப்பாக நடத்த கடுமையாக உழைத்தது, அதற்காக பல இன்னல்களை அனுபவித்தது, வறுமையில் உழன்றது; இரண்டாம் மணிக்கொடியை 'சிறுகதைக்கான இதழாக நடத்தியது. இன்று தமிழ் சிறுகதையின் வரலாற்றை கூறுபவர் அனைவருமே 'மணிக்கொடியின்' ஒப்பற்ற பங்களிப்பைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. 'புதுமைப்பித்தன்', 'கு.ப.ரா', 'ந.பிச்சமூர்த்தி' போன்ற பல எழுத்தாளர்களை வளர்த்தது மணிக்கொடி.

தனது மணிக்கொடி அனுபவத்தை 'மணிக்கொடிக்காலம்' என்ற நூலாக வடித்தார்; அதற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

தன்னலமற்ற மேன்மையான மனிதர், அனைவரிடமும் அன்பு காட்டிய அருமையான மனிதர், எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் தன்னம்பிக்கையும், தைரியத்தையும், உற்சாகத்தையும் கைவிடாதவர்.

பாரதியும், வ.வே.சு. ஐயரும் ராமையாவின் மனப்போக்கை உருவாக்கியவர்கள் என்பார் கே.எஸ்.ராமச்சந்திரன். அவர்கள் வழி வந்த ராமையாவிற்கு நிகழ்காலச் சமூக நிகழ்வுகள் மீது சினம் வந்தது; சீற்றம் வந்தது. எனினும் எதிர்காலத்தின் மீது ஆத்மார்த்தமானதும், ஆவேசமானதுமான ஓர் நம்பிக்கையும் உறைந்து கிடந்தது என்கிறார் ஆசிரியர்.

பள்ளிப்பருவத்தில் விடுமுறையில் என் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே ராமையா அவர்களது நூல்கள் பலவற்றைக் கண்டிருக்கிறேன். அநேகமாக எனது மாமா அவர்கள் வாங்கி வைத்திருந்திருக்கலாம். அவற்றில் 'தேரோட்டி மகன்', 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்' ஆகியவற்றைப் படித்திருக்கிறேன். பின்னர் 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', 'போலீஸ்காரன் மகள்' ஆகிய சினிமாக்களையும் பார்த்திருக்கிறேன்.

தனது 'களப்பலி' என்ற நாடகத்தில் கதாபாத்திரங்கள் மூலம் அவர் எழுப்பும் வினாக்கள் நாம் சிந்திக்க வேண்டியவையாக இருக்கின்றன: தியாகத்தின் விளைவாகப் பாரத நாட்டு மக்கள் பெருவாழ்வு பெறப்போகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த வாழ்வு என்ன விலை கொடுத்துப் பெற்றது என்பது தெரிந்திருக்குமா? விடுதலைக்குப் பிறகு மக்களின் நிலை என்னவாக இருக்கும்? காந்திய நெறியை, சுதந்திரத்தின் மாண்பை மக்கன் உணர்வார்களா?

ராமையா அவர்களது மணிவிழா சென்னையில் 1965 ஆம் ஆண்டு சிறப்பாக நடந்தது. மணிவிழாக் குழுவில் பெரிய பெரிய எழுத்தாளர்கள், திரைத்துறையைச் சார்ந்த முக்கியமான பலரும் இடம் பெற்றிருந்தனர்.

ராமையா அவர்கள் தொண்டைப் புற்றுநோயால் தனது 78 ஆம் வயதில் 18.5.1983 அன்று மறைந்தார்.

பல நல்ல தகவல்களுடன் இந்நூலை சுவைபட எழுதிய பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். அனைவரும் படிக்க வேண்டிய ஒரு ஒப்பற்ற நூல் இது.

நான் அடுத்து செய்யவேண்டியவை என்று கருதுவது ராமையா அவர்களது நூல்களை, குறிப்பாக 'மனிகொடிக் காலத்தைப்' படிக்கவேண்டும்; வத்தலகுண்டிற்கு ஒரு முறை சென்று வரவேண்டும்.

கருத்துகள் இல்லை: