27 நவ., 2009

கருத்துக்கள்-17: "கண் திருஷ்டி" (Evil Eye)

கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஒரு வீட்டுச் சுவரில் அந்த அழகிய 'கண் திருஷ்டி விநாயகர்' படத்தைக் கண்டேன். கேமெரா கையில் இல்லை. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அது கண் திருஷ்டி பற்றி என்னை சிந்திக்க வைத்தது. பொறாமைக்காரர்கள், வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பார்வை நம்மை பாதிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது. பல வீடுகளில் சுவற்றிலோ அல்லது வாசலிலோ கண் திருஷ்டி விநாயகர் படத்தைப் பார்க்கலாம். சில வீடுகளில் திருஷ்டி பூசணிக்காயை கட்டித் தொங்கவிட்டிருப்பர்கள். அல்லது கோரமான ராக்ஷஸ உருவத்தின் படத்தை மாட்டியிருப்பார்கள். இதை மூட நம்பிக்கை என்று எளிதாக தள்ளிவிடலாம்.

ஆனால் இதில் ஏதோ உண்மை இருக்கிறது என்பதை என்னால் கூறமுடியும். நான் ஹோமியோபதி பயின்ற காலத்தில் 'அஸாரம் யூரோப்பியம்' (Asarum Europeum) என்ற மருந்தைப் பற்றி படித்திருக்கிறேன். ('நிலக் கடம்பு' என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் கண் திருஷ்டிக்கான (Evil Eye) மருந்து அது). எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மேலை நாட்டினரிடமும் இது போன்ற நம்பிக்கை இருப்பது. மேலும் அந்த மருந்திற்கான அனுபவக் குறிப்புகளில் ஹோமியோபதி மருத்துவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்தியதைக் கூறியிருந்தார்கள்.

நன்றாகப் பால் கொடுத்துக் கொண்டிருந்த கொழு கொழுவென்றிருந்த பசுமாடுகள் திடீரென பால் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உருக்குலைந்து எழும்பும் தோலுமாக ஆகின. அவற்றை ஹோமியோ மருத்துவர்கள் குணப்படுத்தியிருக்கிரார்கள். எனவே மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் 'கெட்ட பார்வையால்' பாதிக்கப் படக்கூடும்.

நம் தமிழ்நாட்டிலேயே ஒரு புகழ் பெற்ற ஹோமியோபதி மருத்துவர் இதைப் பற்றிக் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. அவரது உறவினரின் குழந்தை வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி மற்றும் இனிமையான குரல், ஸ்லோகங்கள், பாடல்களை மிகத் தெளிவாகப் பாடி அனைவரையும் கவரும் தன்மை பெற்றிருந்தது. ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு பெண்மணி வந்திருந்தபோது, வழக்கம்போல் அந்தக் குழந்தையை அழைத்து பாடச் சொன்னார்கள். அதன் பாடும், பேச்சும் அந்தப் பெண்மணியை மிகவும் கவர, அவர் "குழந்தை என்னமா பாடுகிறாள்" என்று வியந்து பாராட்டிச் சென்றாராம். திடீரென அது முதல் அந்தக் குழந்தை பேச முடியாமல் போனது. பெரிய மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியவில்லை, என்ன நோய் என்று அறியவும் முடியவில்லை. இறுதியில் அப்போது ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த பின்னாளில் புகழ் பெற்ற அந்த ஹோமியோபதி மருத்துவர், அந்தக் குடும்பத்தில் ஒருவர். குழந்தையின் பெற்றோர் எப்படியாவது குணமானால் சரி என்று சம்மதிக்க. அவர் 'அஸாரம் யூரோப்பியம்' என்ற மருந்தைக் கொடுக்க, குழந்தை விரைவில் குணமடைந்து, முன்போல் பாட, பேச ஆரம்பித்து விட்டாள். இதெல்லாம் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். ஆனால் நான் இதை முழுமையாக நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை: