5 ஆக., 2010

சூரியின் டைரி-23: குறள் நெறி வாழ்க்கை


மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக நாங்கள் நடத்திய ஒரு தமிழ்க் கருத்தரங்கத்தைக் கண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் எங்களை அவர்களது பலகலைக்கழகத்தில் ஒரு தமிழ்க் கருத்தரங்கம் நடத்தும்படி அன்புடன் கேட்டுக்கொண்டார்.  அதன்படி "குறள் நெறி வாழ்க்கை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்க் கருத்தரங்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்த இசைந்தோம்.  அந்தப் பேராசிரியர் அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்வதாகவும், நாங்கள் சிறப்பு பேச்சாளர்களுடன் வந்து கருத்தரங்கத்தை மட்டும் நடத்தினால் போதும் என்று கூறியிருந்தார்.  அதன்படி குறிப்பிட்ட நாளில் நாங்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தை அடைந்தோம்.  கருத்தரங்கம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் காணாமல் திகைத்தோம்.  வாசலில் இருந்த காவலாளிக்கு அது பற்றி எதுவுமே தெரியவில்லை.  எங்களை வரவேற்கவும் அங்கே யாரும் இல்லை.  சுற்றிச் சுற்றி வந்ததில் கடைசியில் ஒரு விரிவுரையாளர் தென்பட்டார்.  அவர் எங்களை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.  அந்தப் பேராசிரியர் பற்றி வினவியதில் அவர் திருச்சிக்கு எங்களுக்கு உணவைக் கொண்டுவரச் சென்றிருப்பதாகச் சொன்னார்.  மேலும் மாணவர்கள் ஏதோ பிரச்சினை காரணமாக பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிப்பதாயும், பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறினார்.  அதனால்தான் உணவு பல்கலைக்கழக மெஸ்ஸில் ஏற்பாடு செய்யமுடியவில்லை என்றார்.  கருத்தரங்கம் நடக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது.  பல்கலை அரங்கம் மிகப் பெரியது. யாரும் இல்லாமல் அங்கே எப்படி கருத்தரங்கத்தை நடத்துவது? ஒரு நாள் கருத்தரங்கத்தை அரை நாள் கருத்தரங்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.  திருச்சி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலாண்மைப் பிரிவு, கணினிப் பிரிவு மாணவர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.  அரங்கமே நிறைந்தது!  ஆனால் அந்த மாணவர்களுக்கு கருத்தரங்கத்தில் ஆர்வம் இருப்பதுபோல் தெரியவில்லை.  ஏதோ கட்டாயத்தின் பேரில் வந்ததுபோல் தோன்றியது. 

ஒருவாறாக, கருத்தரங்கம் ஆரம்பமானது.  துணைவேந்தர் வரமாட்டார் என்று கூறப்பட்டது.  ஆனால் இறுதியில் அவரும் வந்து துவக்கவுரை நிகழ்த்தி சிறப்பித்தார்.  அடுத்து எங்கள் அமைப்பின் தலைமைப்புரவலர் முனைவர் மீ.இராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

குறள் நெறி வாழ்க்கை பற்றி பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன் (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்), பேராசிரியர் எஸ்.இரகுநாதன் (இயக்குனர், கணினி மையம், அழகப்பா பல்கலைக்கழகம்), புலவர் இளங்குமரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியில் எல்லாமே நல்லபடியாக முடிந்தது.  நாங்கள் சிலர் மட்டும் புலவர் இளங்குமரன் அவர்களது திருவள்ளுவர் தவச்சாலை மற்றும்  திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் சென்று வந்தோம்.

இந்தக் கருத்தரங்கம் எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.  எனவே அது என் நினைவில் பதிந்துவிட்டது.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரண்டு மட்டும் என்னிடம் இருந்தது.  முதலாவது புலவர் இளங்குமரன் அவர்கள் சிறப்புரையாற்றியது. அடுத்தது பேராசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றியது.  இரண்டையும் மேலே பதிவு செய்துள்ளேன்.     

கருத்துகள் இல்லை: