16 பிப்., 2011

சூரியின் டைரி-49: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 ஐந்தாம் நாள்

பேராசிரியை  ஆவுடையம்மாள்  தயாளனின்
வினாடி-வினா  நிகழ்ச்சி

போட்டிக் கட்டுரைகளை திருத்தும்
பேராசிரியர் பழனி ராகுலதாசன்

நண்பர்கள் இராமகிருஷ்ணனும்,
ஸ்ரீவித்யாராஜகோபாலனும்

வேதாத்திரி மகரிஷி புத்தக ஸ்டாலில்
நண்பர் செல்வராஜ் மற்ற அன்பர்களுடன்

என்னைக்  கவர்ந்த இன்னொரு ஸ்டால்







சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களது
நூல்களும், வீடியோ டிவிடிகளும்

ஆங்கில நூல்கள் நிறைந்ததும், இருப்பதிலேயே பெரியதுமான  
லியோ பதிப்பக ஸ்டால்




சத்ய சாய் பாபா நூல்கள்







என் மனத்தைக் கவர்ந்த காலச்சுவடு ஸ்டால் - பல கோணங்களில்

நாதம் கீதம் பதிப்பகத்தின் ஸ்டால்
நேற்று  (பிப்ரவரி 15 , 2011)  மாலை ஐந்து மணி அளவில் காரைக்குடி கம்பன் மணி மண்டபம் சென்றேன், புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள.  முகப்பில் பேராசிரியர் மு.பழனி ராகுலதாசன் அவர்களையும், பேராசிரியை ஆவுடையம்மல் தயாளன் அவர்களையும் பார்த்தேன். என்னைப் பார்த்ததும், உங்களுக்கு நூறு வயசு, உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்றனர்.  (யாரைப் பார்த்தாலும் இதே போல் சொல்கின்றனர், பொருள்தான் விளங்கவில்லை எனக்கு). பேராசிரியர் ராகுலதாசன் அவர்கள் பதிப்பித்து வந்த ஒரு நான்கு-பக்க மாத இதழ், 'பாரதி ஞானம்'  எனக்கு மிகவும் பிடித்தது.  பின்னர் அது பல்வேறு காரணங்களால் நின்று போய்விட்டது. 

பேராசிரியை ஆவுடையம்மல் தயாளன்  பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார்.  ஒன்பது ஆண்டுகளாக இந்தப் பொறுப்பு அவர்களிடம் உள்ளது.  ஒவ்வொரு சரியான பதிலுக்கும் அங்கேயே ஒரு நல்ல புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.  (படம் மேலே). 

தம்பி நெல்லையப்பனுக்காக கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைத் தொகுப்பு, கு.அழகிரிசாமியின் சிறுகதைத்தொகுப்பு, லா.ச.ராமாமிருதத்தின் சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றைத் தேடினேன்.  எங்குமே கிடைக்கவில்லை. தமிழில் சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை சேர்த்துக் கொண்டிருந்தான்;  அவனிடம் ஏறகனவ பல நல்ல சிறுகதைத் தொகுப்புகள் இருப்பதை நான் அறிவேன்.  இறுதியில் அவனுக்காக முத்துக்கள் பத்து வரிசையில் ஆ.மாதவனின் பத்து சிறுகதைகள், எம்.வி.வெங்கட்ராமின் பத்து சிறுகதைகள்   ஆகிய இரண்டு நூல்களையும் வாங்கினேன்.  (ஒவ்வொன்றும் ரூபாய் ஐம்பது; தள்ளுபடி போக ரூபாய் நாற்பத்தைந்து).  (அம்ருதா பதிப்பக வெளியீடு - கதைகளைத் தேர்வு செய்தது:  திருமதி திலகவதி ஐ.பி.எஸ்.).

இந்தி, ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் டாக்குமெண்டரிகள் கடையில் ஆங்கில இலக்கியம் படித்த என் மகளுக்காக   சர் லாரன்ஸ்  ஒலிவியர் இயக்கிய ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லட்',  'ஜூலியஸ் சீசர்',  ரிச்சர்ட் பர்ட்டன், எலிசபெத் டைலர் மற்றும் ரெக்ஸ் ஹாரிசன் நடித்த 'கிளியோபாத்ரா',  மற்றும் 'ஜோன் ஆஃப்   ஆர்க்'  டிவிடிகள் வாங்கினேன்.  ஒவ்வொன்றும் தள்ளுபடி போக ரூபாய்  ஐம்பத்தைந்து.  இந்தியில் குரு தத், ரித்விக் கடாக் இயக்கிய மிகச் சிறந்த திரைப்படங்கள், சத்யஜித் ரேயின் வங்காள மொழித் திரைப்படங்கள், அற்புதமான அறிவியல், சரித்திர டாக்குமெண்டரிகள் அந்தக் கடையில் இருந்தன.  சத்யஜித் ரேயின் 'தி அப்பு த்ரைலாஜியும்'  (The Apu Trilogy - Pather Panjali , Aparajito and Apur Sansar), 'The Gods Must be Crazy '  முதல் பாகமும் வாங்கினேன்.

பிப்ரவரி மாத  காலச்சுவடும், உயிர்மையும் வாங்கினேன்.

சுற்றிவருகையில் நண்பர் ஸ்ரீவித்யாராஜகோபாலன் அவர்களைப் பார்த்தேன்.  முன்தலை வழித்து, பின் ஜடை வளர்த்து, ஐதீக பிராம்மணராகக்  காட்சியளித்தார். எங்களது அலுவலகத்தில் இணை இயக்குனராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  புத்தகங்களின் காதலர்.  அவரது சொந்த நூலகம் காரைக்குடியில் பெயர் பெற்றது.  இந்து ஆங்கில நாளிதழிலும், தினமணியிலும் அதைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த புத்தகத் திருவிழாக் குழுவின் துணைத் தலைவர்.

அடுத்து நண்பர் திரு மு.இராமகிருஷ்ணன்  அவர்களைப் பார்த்தேன்.  எங்கள் அலுவலகத்தில் துணை இயக்குனராகப் பணிபுரிபவர்.  அவரும் ஆரம்ப காலங்களில் புத்தகத் திருவிழாவை நடத்த நாங்கள் பட்ட சிரமங்களை நினைவு கூர்ந்தார்.        

கருத்துகள் இல்லை: