29 மே, 2020

இன்று ஒரு தகவல்


கோயில்களில் இதுபோன்ற நீளமான கோடு காணப்பட்டால் இதை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள். அதற்கு பின் இவ்வளவு விசயம் உள்ளது. (எல்லா கோடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டாம் சில நேரங்களில் அது அழகுக்காகவும் போடப்பட்டிருக்கலாம்) தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் குறுக்கே படத்தில் இருப்பதைப் போல் ஒரு கோடு இருக்கும். இது நில அளவைக்காக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழர்களால் பயன்படுத்தப்பட்ட அளவைக் கோல். அதாவது ஒவ்வொரு கோயிலுக்கும் நிலங்கள் தானமாக அன்றைக்கு அளிக்கப்பட்டது. அப்படி தானமளிக்கப்பட்டது எத்தனை குழி, அந்த நிலம் ஊரில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதும் தெளிவாக கல்வெட்டில் குறிக்கப்படும். வடக்கு, தெற்கு என நான்கு திசைகளும் குறிக்கப்பட்டு இந்த திசையில் இந்த இடத்தோடு முடிவடைகிறது என்று அருகில் இருக்கும் ஒரு அடையாளமும் தெரிவிக்கப்பட்டிருக்கும். கோயில் சுவற்றில் இருக்கும் இந்த கோலின் அளவைக் கொண்டு தான் நிலத்தை அளந்தோம் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்கும், நாளை கோயில் நிலத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால் மீண்டும் இந்த பொறிக்கப்பட்டுள்ள கோலின் அளவைக் கொண்டு கணக்கிடலாம் என்பதற்கும் அதை கோயில் சுவற்றில் நிரந்தரமாக பதித்தனர். இந்த கோல் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்பட்டது. இது முன்னரே பழக்கத்தில் இருந்தாலும். இராஜராஜன் தான் முதல் முதலாக சோழ நாடு முழுவதையும் நஞ்சையும், புஞ்சையும் தனித்தனியாக அளந்தான். சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் சிறப்பாக செய்து முடித்துள்ளது. இதனால் இராஜராஜன் "உலகளந்தான்" என்ற பட்டமும் பெற்றான். அப்படி அவன் காலத்தில் அளக்கப்பட்ட கோலிற்கு பெயர் "உலகளந்தான் கோல்" என்பதாகும். அது பதினாறு சாண் நீளமுடையதாக இருந்துள்ளது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு அரசு எப்படியெல்லாம் சிறப்பாக இயங்கியுள்ளது என்பதற்கு இதுவெல்லாம் நமக்கு கிடைக்கும் சாட்சி!


நன்றி: Ms அபி அபிநயா, புதிய தகவல், முகநூல்.

கருத்துகள் இல்லை: