26 டிச., 2007

கவிஞர் ஜனநேசனின் ஹைகூ கவிதைகள்-1

வாழ்க்கை எனும் விஸ்வரூபத்தை ஹைகூ எனும் வாமன அவதாரத்தில் அடக்குகிற உரிமை கவிஞர்களுக்கு உண்டு. ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். கவிதை எவ்வளவு நீண் டாலும் சரி, எவ்வளவு சுருங்கினாலும் சரி, அது வாழ்வின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். மனிதன் கண்டுபிடித்த எந்த விஷயத்தில்தான், மனிதன் வெளிப்படாமல் இருந்திருக்கிறான்?...

இதற்கு கச்சிதமான எடுத்துக்காட்டாகச் சில ஹைகூ கவிதைகள்:
கும்பிட்டு இருந்தால் சோறு வருமோ
விரல்களை விரி தாமரையே
சூரிய சக்தி கிட்டும்
எனும்போது வாழ்வின் ஒட்டு மொத்தமான பிம்பம் கிட்டிவிடுகிறது.அதிலும் கவிஞர் ஜனநேசனுக்கு மிகவும் இளகிய மனசு. சகஉயிர்களிடம் அன்பைப் பொழிகிறார்.
நெல்கட்டு சுமக்கும் காலுக்கு
ஒத்தடம் தரும்
வரப்புப்புல்லின் நன்றி
வரப்பிலே நெற்கதிரைச் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடக்கிற கால்களை நாமும் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படியொரு நினைப்பு வரவில்லையே. என்ன செய்வது, நாம் கவிஞர்கள் இல்லையே!
பிற உயிர்கள் பால் இவ்வளவு நேசம் காட்டுகிற கவிஞர் தன் உயிரை ஈந்த அந்த உயிரை மறப்பாறா? ஹைகூவில் ஆத்மார்த்த நமஸ்காரம் செலுத்தி விடுகிறார்.
மெல்ல முடி எடுங்கள்
பிள்ளைக்கு வலிக்கும்
படபடத்து வேகும் அம்மாவுடல்.
இவரின் அன்பு எல்லையில்லாதது. காக்கை குருவிகளையும் தாண்டி, மரம், செடி, கொடிகளையும் காதலிக்கிற அன்பு. அவர் வியக்கிறார் -
துப்பிய விஷம் அருந்துகிறாயே
நீ சிவபெருமானோ
ஓ.... மரம்!!
பிறருக்காக விஷம் அருந்துவதுதான் கடவுளின் தன்மை என்றால், இந்த பூமிப் பந்திலேயே நிறையக் கடவுள்கள் இருக்கிறார்கள் என்று இனங்காட்டி விட்டார்.
யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை என்பதே கவிதைதான் . அதில் இல்லாத மென்மையா, வேகமா, சுகமா, சோகமா, நவரசங்களா? கவிதையில் வாழ்க்கை வருமென்றால், இவையெல்லாம் வரத்தான் செய்யும், வரத்தான் வேண்டும்.
அதுதான் சிருஷ்டி வேலை, சித்து வேலை, அதிசயம், அற்புதம் என்கிற வியப்பு. இதையும் கூடக் கவிதை ஆக்கலாம், ஆக்கியிருக்கிறார் இந்தக் கவிஞர்.
முறுக்கேறி விறைத்தும்
குழைந்து பாடுகிறாயே
வீணைநரம்பு !
இதுதான் கவிதையின் இலட்சணம். இது இவருக்குள் கைவருகிறது.
கவிஞர் ஜனநேசனின் "சூரியனைக் கிள்ளி"க்கு பேராசிரியர் இரா.கதிரேசன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து"
சூரியனைக் கிள்ளி" (ஹைகூ கவிதைகள்)
கவிஞர் ஜனநேசன்
விலை: ரூபாய் 15/-
காலம் வெளியீடு
19-1, பிள்ளையார் கோவில் தெரு
கோரிப்பாளையம், மதுரை-625002

கருத்துகள் இல்லை: